Wednesday, March 29, 2006

தவமாய் தவமிருந்து


மார்ச் 5, 2006

எல்லோருக்கும் விடிவது போலவே ஷ்யாம் சுந்தருக்கும் விடிந்தது. ஆனால் அந்த விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. ஆம். ஷ்யாம் சுந்தர் இறந்து போனார். இறப்பது ஒரு விபத்தா? இல்லவே இல்லை. ஜனித்தவை மரிக்க வேண்டும். இயற்கையின் சுழற்சி. ஆனால் மரிக்கும் முறையை யார் தீர்மானிப்பது?

ஷ்யாம் சுந்தரின் மனைவி தீபா. கணவனை இழந்த துக்கத்தில் 3 வயது மகளை நினைத்து, குமுறுகின்றார். தீபாவின் இழப்பு ஏனையோரின் இழப்பை விட எவ்வகையிலும் உயர்ந்ததா? ஷ்யாமை அவரது பெற்றோர் தவமாய் தவமிருந்து பெற்றிருக்கலாம். அப்பாவே பிள்ளைக்கு கொள்ளி வைப்பது புதிதான ஒன்றா?

ஒவ்வொரு நாளும் கணவரோ, மனைவியரோ, மகனோ, மகளோ ஏதாவதொரு பந்தம் இப்பூவுலகை விட்டு விடுதலையாகிக் கொண்டுதான் இருக்கின்றது. வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வது 99.9% நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் ஷ்யாம் சுந்தர் மரணம் காத்திருப்பது தெரிந்தும் அதைத் தேடிப் போனவர். அவர் "திரு" என்ற அடைமொழியை விட இராணுவ "மேஜர்" என்னும் அடைமொழிக்கு உரித்தானவர். இந்திய இராணுவத்தில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் தோட்டா துளைத்து வீர மரணமடைந்தார்.

மேஜர் ஷ்யாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பாவம் இவருக்கு தமிழ் தேசியம் பற்றி தெரிந்திருக்குமா?

கடந்த சில காலமாக தமிழ் ஊடகங்களை ஆழமாகக் கவனித்து வாசித்து வந்தேன். இதே மேஜர்.ஷ்யாம் ஒரு கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளகியிருந்தாரென்று வைத்துக் கொள்வோம். உடனே அவர் தமிழ் வலைப்பதிவாளர்களின் "நட்சத்திரம்" ஆகிவிட்டிருப்பார்.

ஆமாம் அவ்ர் வாங்கிய சம்பளத்துக்கு பதிலாகத்தானே உயிரை விட்டிருக்கின்றார். அவர் ஒன்றும் இலவசமாக உயிர் துறக்கவில்லையே? இலவச ரேஷன், இலவச வீடு, படிகள், மானியங்கள், அரசு உத்தியோகத்தில் 1% ரிஸர்வேஷன் போன்ற பல சலுகைகளை அனுபவித்தவர் தானே?

மேஜர் ஷ்யாம் மரணம் பற்றி நான் பார்த்த வரையில் வெகுஜன ஊடகங்களின் வரிசையில் "குமுதம் பப்ளிகேஷன்ஸ்" மட்டுமே செய்தி வெளியிட்டு இருந்தது. இறக்கும் ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும், அதுவும் சண்டையில் உயிர் துறப்பவனுக்கு என்ன மரியாதை என்று அமெரிக்காவில் பார்த்த பின்னரே அறிவேன்.

எனது வருத்தம் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது மீடியாக்களில் அதுவும் வலைப்பதிவுகளில் ஒரு குறைந்த பட்ச செய்தி ஆகும் தகுதி கூடப் பெறவில்லையே என்றுதான்.

இச்சமயத்தில் உயிர் மற்றவர்களுக்காக இறப்பதற்காகவா என்று தனது தடாகம் வலைப்பதிவில் நியாயமான கேள்வியெழுப்பிய சக வலைப்பதிவர் சுருசல் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

மறைந்த மேஜர். ஷ்யாம் சுந்தருக்கு என் வீர வணக்கங்கள்! அன்னாரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஜெய்ஹிந்த்

படம்: மேஜர். ஷ்யாமிற்கு மெட்ராஸ் ரெஜிமெண்ட்டின் இராணுவ மரியாதை.
நன்றி: நியூஸ் டுடே நெட்