Saturday, December 25, 2004

தமிழ்நாட்டில் நிலநடுக்கம் சுட்டி

முதல் சுட்டி : thatstamil.com

உயிர் மற்றும் பொருட்சேதமில்லை என்று வலைத்தளம் கூறுகின்றது.

தமிழ்நாட்டில் நிலநடுக்கம்???

இப்போதுதான் கேள்விப்பட்டேன். இன்று (சற்று முன்னர்) சென்னை, கடலூர் மற்றும் காரைக்காலில் நிலநடுக்கம் ஏற்பட்டதென்று. இங்கு எனக்கு தமிழ் சேனல்கள் பார்க்கும் வாய்ப்பு கிடையாது. திருவல்லிக்கேணியில் கடல் நீர் புகுந்து விட்டதாக கவலையுடன் உறவினர் கூறினர். மெரினாவில் காலை நடைக்கு சென்றவர் காணாமல் போனதாகவும் சொல்கின்றனர். இணையத்தில் செய்தி எதுவும் இல்லை. விபரம் அறிந்தோர் செய்தி பரிமாறிக் கொள்வீர்களா?

கவலையாக இருக்கின்றது.

Wednesday, December 22, 2004

சபாஷ் ஞாநி

திரு. ஞாநி அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அவரும், சின்னக்குத்தூசியும் இணைந்து சங்கராச்சாரியாரை முன்னர் எடுத்த பேட்டியில் இருக்கும் 'சரக்கு', இக்கட்டுரையில் சுத்தமாக இல்லையென்கின்ற ஆதங்கம் பிடுங்கித் தின்கின்றது. வலைபூக்களில் இக்கட்டுரையை விமர்சனம் செய்த சிலர் 'தட்டையாக இருக்கின்றது' என்றார்கள். உண்மைதான். ஞாநியின் எழுத்து வன்மையைப் பற்றி அறிந்த பலருக்கும் இந்த வாசிப்பு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அனைத்து ஊடகங்களிலும் வரும் மறுப்பை (Disclaimer) நானும் முன்னரே சொல்லி விடுகின்றேன்(!!). தீபாவளி கொண்டாடாத குடும்பத்தில் உதித்தவன் நான். முத்திரை குத்த விரும்புவோரின் விருப்பத்திற்காக இதை முன்னரே சொல்லியாக வேண்டும். இக்கட்டுரை பச்சையாகவோ, மஞ்சளாகவோ, காவியாகவோ, கறுப்பாகவோ பார்வையில் பட்டால், அது உங்கள் கண்களின் குற்றமே தவிர எனது நிறமதுவல்ல.

ஞாநியின் கட்டுரை ஆரம்பமே வித்தியாசமாக இருக்கின்றது. "கிரிமினல் சங்கராச்சாரி. நாம் சொல்லவில்லை! அரசே சொல்லுகிறது!" அப்படியென்றால் இதுவரை அரசு சொன்னதை எல்லாம் வேத வாக்காக ஞாநி எடுத்துக் கொண்டார் போலிருக்கின்றது. ஆமாம்...ஒரு கிரிமினலை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளவேண்டும்? கைது செய்யப்போன அதிகாரிகள் காலணிகளை கழட்டிவிட்டு, மிகவும் பவ்யமாக கைகட்டி 'கைது' செய்து சொகுசாக அழைத்து வந்திருக்கின்றார்கள். மேலும் சிறையில் காவியுடுத்தி, பூஜை புனஸ்காரத்திற்கு ஏற்பாடு செய்து, தண்டத்தோடு உலவ வகை செய்து, பிராமண அதிகாரியை மேற்பார்வை பார்க்கச் செய்து, பிராமண கைதியை விட்டு சமைக்கச் செய்து என்று ஏகத்திற்கும் சலுகைப் பட்டியல் நீளுகின்றது. ஒரு கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு 'கிரிமினலை' அரசு நடத்தும் விதம் 'பாராட்டுதற்குரியதுதான்'. இல்லையா ஞாநி அவர்களே? இக்குற்றத்தையே நீங்களோ அல்லது நானோ செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கணித்துறையில் திட்ட மேலாளராக இருக்கும் எனக்கு மடிக்கணி (laptop) கொடுத்து, இணைய இணைப்புத் தந்து சிறைச்சாலையில் உலவ விடுமா இந்த அரசு? ஜெயலலிதா அரசின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி ஞாநி ஏன் வெளிப்படையாகச் சாடாது பூடகமாய் மௌனம் காக்க வேண்டும்?

அதே சமயம் தனது கேள்வி-பதில் பகுதியில், 'சங்கர மடம் காப்பாற்றப் படவேண்டும்', 'சங்கர மடத்தில் வருமான வரித்துறை சோதனையிட வேண்டி தனது அமைச்சரை கருணாநிதி பணிக்கவில்லை', 'அப்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆள்; அதனால் கருணாநிதிக்கும் இவ்வழக்கில் உள்நோக்கம் இருக்கலாம்' என்று கருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கவனமாகக் கலைக்கின்றார் ஞாநி. அவை யாவுமே கருணாநிதியைப் பற்றி மிகச் சரியான கருத்துகள்தாம். ஆனால் சங்கராச்சாரிக்காக சனிக்கிழமை நீதிமன்றம் கூடியதிலிருந்து, தனிப்பட்ட செஸ்னா விமானம், டயோட்டா குவாலிஸில் பயணம், போலீஸ் அவர் மீது சுட்டுவிரல் கூடப் படாமல் நடத்தும் விதம், தனது அரசியல் வாழ்விலேயே எடுத்த வேதனையான முடிவு என்று ஜெயலலிதா டில்லியில் கொடுத்த அறிக்கை என்று அரசின் இரட்டை நிலைப்பாட்டினை ஞாநி ஏற்றுக் கொள்கிறாரா? அரசாங்கத்திற்கு தெரியாமல் இத்தகைய சலுகைகள் 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு கிட்டியிருக்குமா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிய அப்துல் நாசர் மஹ்தனிக்கு கால் வலியென்று கேரள மருத்துவமனையில் சிகிச்சை கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு செய்த பதில் மனுவில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியும் தரப்பட்டது. அம்மனுவை தாக்கல் செய்த தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராயிருந்த முனீர் ஹோதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரணமென்ன? தமிழக முதல்வருக்கே இத்தகவல் தெரியாததுதானாம். முனீர் ஹோதா ஆகஸ்ட் மாத இறுதியில் சஸ்பெண்ட் ஆனார். ஆனால் அவர் அரசின் சார்பில் பதில் மனு பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்து விட்டார். ஐந்து மாதங்களாக முதல்வர் என்ன செய்தார்? 'தீவிரவாதி' மஹ்தனிக்கு ஒரு நியாயம். 'கிரிமினல்' சங்கராச்சாரிக்கு அதே அரசாங்கம் வேறு 'நியாயம்' படிக்கின்றது. இது ஜெயலலிதா அரசாங்கத்தின் இரட்டை வேடமில்லையா?

இக்கைது வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வு என்று ஞானி சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆஹா எத்தகைய அபார கண்டுபிடிப்பு? இதை ஞாநி சொல்லித்தான் ஞாலம் அறிய வேண்டுமா? கருணாநிதி முதலமைச்சராய் இருந்தால் இக்கைதை நிறைவேற்றியிருப்பாரா என்று விஷமத்தனமான கேள்வி வேறு. அவரும் சராசரி அரசியல்வாதிதான். தனக்குச் சாதகமென்றால் கண்டிப்பாய் செய்திருப்பார். ஆட்சிக்கலைப்பு என்ற பதம் கருணாநிதிக்குப் புதிதில்லை. மேலும் சங்கராச்சாரிக்கு ஓட்டு வங்கியில்லையென்பதையும் தாங்கள் அறிவீர்கள். திமுக ஒரு பிராந்தியக்கட்சி தான். தேசீயக்கட்சியா என்ன மற்ற மாநிலங்கள் பற்றி கருணாநிதி கவலைப்பட? ஏன் ஜெயலலிதாவே பிஜேபி ஆட்சி மத்தியில் இருந்தால் சங்கராச்சாரி மீது கை வைத்திருப்பாரா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தானே?

ஜெயேந்திரர் கைது பற்றி ஜெயலலிதாவை புகழ்ந்து எழுதிய ஞாநியின் கரம், நீதிபதியிலிருந்து, ஜனாதிபதி வரை காஞ்சியில் நமஸ்கரித்த சம்பவங்கள் கூறி வழக்கின் எதிர்காலப் போக்கு பற்றி சந்தேகங்கள் கிளறுகின்றது. ஜெயலலிதா திருந்தியது (?) போல் ஏன் நீதிபதிகளும், குடியசுத் தலைவரும் திருந்தக் கூடாது? திருந்த வாய்ப்புத்தான் கொடுத்துப் பார்ப்போமே! நீதி தனது வழியில் பயணித்து உண்மையை நிலை நாட்டட்டும். இதற்கு ஐ.நா.வின் உலக நீதிமன்றம் அவசியமில்லை.

ஜெ துதி பாட முடிவு செய்த பின்னர் அதை கருத்தில் வடிக்க ஞாநி அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கருணாநிதி பேசுவது போலி பகுத்தறிவு, வீராணம் தண்ணீர், வீரப்ப சம்ஹாரம் என்று 'கடவுள் பக்தை'யின் சாதனைகளை பட்டியலிட 'பகுத்தறிவு பகலவன்' ஞாநி தேவையில்லை. அமைச்சர் 'ஓ' பன்னீர் செல்வமே பொதும். வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட வேண்டியது, அதில் ஊழல் செய்து தமிழகத்தில் லஞ்ச லாவண்யத்தே அறிமுகப்படுத்தியவர் கருணாநிதியென்று காலம் காலமாய் எம்ஜியாரும், ஜெயலலிதாவும் அரசியல் பேசியதை ஞாநி சுலபமாக மறந்து விட்டாரா? இன்று அதே வீராணத்தில் இருந்து (சிறிய) குழாய் போட்டு சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்த போது இத்திட்டத்திற்கு முன்னோடியான கருணாநிதி (ஊழல் புரிந்திருப்பினும்) ம(றை)றக்கப்படுகின்றார்.

உயிரோடு பிடித்து, பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதை விட்டு விட்டு, பொறியில் சிக்கிய எலியான வீரப்பனை 'என்கௌண்டர்' வதம் கண்டு பலருக்கும் புனர்வாழ்வளித்த ஜெ சரணம் பாடுங்கள் ஞாநி! ஆமாம் ஜெவின் முரட்டுப் பிடிவாதம் எல்லா பகுத்தறிவாளர்களாலும் (குறிப்பாக பெரியார் திராவிட கழக அன்பர்கள்), எல்லா அசல் பக்தர்களாலும் பாராட்டப்பட வேண்டியதே! வர வர இடதுசாரிகள் மற்றும் பகுத்தறிவாதிகளின் நிலைப்பாடும், திராவிடத் திராபைகள் போலவே திரிந்து போய், என் சிற்றறிவிற்கு எட்டமாட்டேன் என்கின்றது.

பாவம்...கருணாநிதி மதித்ததால் 'மகாப் பெரியவா'ளையும் ஞாநி விட்டு வைக்கவில்லை. பகுத்தறிவை முன்னிறுத்தி மகாப்பெரியவாளின் தீண்டாமை மற்றும் வருணாசிரமத்தை கண்டிக்க வேண்டிய ஞாநி, கருணாநிதியை நிந்தித்து, ஜெ துதி பாடுவது சகிக்கவில்லை. (தனது கேள்வி-பதில் பகுதியில் பெரியவாளை தனது பாணியில் சாடியிருக்கின்றார். சபாஷ்!)

சட்டத்திற்கு முன்னர் யாரும் 'பெரியவா/சின்னவா' இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டனை அடைந்தே தீர வேண்டுமென்று முழங்கவேண்டிய ஞாநி, தனது கட்டுரையில் கருணாநிதியை சாடுவதில்தான் அதீத சிரத்தை காட்டியிருக்கின்றார்.

சங்கரராமன் பற்றி ஊடகங்களின் வழியே தான் அறிந்தவற்றை அழகாக தொகுத்திருக்கின்றார் ஞாநி. பிறகு நாம் அறியாத ஒரு அரிய உண்மையையும் அகழ்வாராய்ந்து சொல்கின்றார். "ஓட்டையும், பணத்தையும் தவிர எந்த லௌகீக சக்தியும் நம்முடைய அரசியல்வாதிகளை கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் வகையறாக்களை இயக்குவதாக நான் கருதவில்லை." சபாஷ்! ஞாநி சரியான கண்டுபிடிப்பு! நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியது. உங்களது புதிய 'நடுநிலைமை சங்கடம்' புரிகின்றது.
ஜெயலலிதாவை சாடும் சாக்கில் கொஞ்சம் அள்ளிப் போடவும் ஞாநி தயங்கவில்லை. "தன்னை விட உயர்ந்தவர் என்று ஜெயலலிதா அவர் நம்புகின்ற கடவுளைத் தவிர வேறு எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை", என்று பிரஸ்தாபம் செய்கின்றார். கோவில் கோவிலாக சுற்றி, புலிப் பலி கொடுத்து, யானைத் தானம் கொடுத்து மறுபடி சென்ற தேர்தலில் சட்டசபையை வளைக்காவிடில், கடவுளரும் ஜெ பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியாதென்பது நிதர்சனம். பணிக்கரின் கணக்குப்படி ஜெ சென்றது பலருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம். பாவம் நீதி கேட்கும் கண்ணகி சிலை கூடத் தப்பவில்லை.

கருணாநிதியியாகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும், அவர்களது குறி மக்களின் ஓட்டு மட்டும்தான்; வேறில்லை. இதைச் சொல்ல ஒரு மூடன் போதும். ஞாநி போல் ஒருமூத்த பத்திரிக்கையாளர் தேவையில்லை. அதே போல் பத்திரிக்கைக்கு வாசகர்கள் தேவை. தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் தேவை. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினராகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தாம். திராவிடக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு சென்றதும், அவரது மந்திரிகள் அலகு குத்தி தேர் இழுத்தனர். ஜெ'க்கு பச்சை என்றால் கருணாநிதிக்கு மஞ்சள் நிறத்தின் மீது (மூட)நம்பிக்கை. எல்லாம் காலத்தின் கோலம். இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு போன்ற வீர தீரக் குறிக்கோள்களை திராவிடக் கட்சிகள் தொலைத்து வெகு காலமாகி விட்டன. தேவைப்படும்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி இக்கொள்கைகளை திராவிடக் கட்சிகள் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததுதான். அதனால் கருணாநிதி சன் டிவியில் தீபாவளி கொண்டாடச் சொல்கிறாரென்று ஞாநி விசனப்பட வேண்டாம்.
ஜெயேந்திரர் கொலைக் குற்றம் புரிந்தாரா? அனுராதா ரமணிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா? ராதா கிருஷ்ணனை கொல்ல கூலிப்படை ஏவினாரா? ஸ்ரீரங்கம் உஷாவுடன் அவருக்கிருந்த தொடர்பென்ன? மடத்தின் நிதி நிர்வாகத்தில் மோசடி நடந்ததா? இது போன்ற பல கேள்விகட்கு நீதிமன்றம் முறைப்படி பதில் காணட்டும். சாமியாரைக் கைது செய்ததால் ஏதோ ஜெயலலலிதா 'நல்ல அரசியல்வாதி'யாகவும் (தைரியலட்சுமி?), கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் தைரியமாக இதைச் செய்திருக்க முடியாதென்று முடிவு கட்டி அவரை 'கோழை அரசியல்வாதி' என்று ஞாநி வருணிக்க விழைவதுதான் காலத்தின் கட்டாயமோ?

போகிற போக்கில் RSS'யையும் விட்டு வைக்கவில்லை ஞாநி. அதிகாரம் கிட்டுமானால் பைபிள், குரானையும் பற்றி கூட அவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களாம். அவ்வாறே நடக்கட்டும். பெரியார் திராவிடக் கழக அன்பர்களும் பைபிள், குரானையும் பற்றி பேசட்டும். எவ்வளவு நாட்கள்தான் (சோதா) இந்து மதத்தையே கிண்டலடித்து பகுத்தறிவு வளர்ப்பது? மேற்கூறியது நடந்தால் ஞாநிய்¢ன் வாயில் சர்க்கரை போடுவோம்.
'பொது வாழ்க்கையில் உள்ள எந்தப் பிரமுகரும் இனி எந்த மதத்தின் நடவடிக்கைகளுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வோம் என்று அறிவிக்க வேண்டும்' என்ற ஞாநியின் கருத்து கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டியது. சங்கரமட சரணாகதியாகட்டும், நோன்புக் கஞ்சியாகட்டும், பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையாகட்டும் மதத்தை நினைவுபடுத்தும் எத்தகைய நிகழ்வுகளிலும் பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் பங்கேற்கக் கூடாதென்று 'சத்தியப் பிரமாணம்' வாயிலாக உறுதிமொழி எடுக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் முக்கியமான விஷயத்திற்கு வருகின்றார் ஞாநி. ஞாநி+சின்னக்குத்தூசியின் செவ்விக்கு தவறான உள்நோக்கு காட்டியமைக்காக சோ மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார். இந்த விவரத்தை கட்டு-உரையின் முகப்பிலேயே கூறியிருந்தால், படிக்க நினைத்து நேர விரயம் செய்யாமல் பல வாசகர்கள் தப்பித்திருக்கலாம்.

தனிமனித தோப்புகளும், மற(ர)த்தமிழர்களும்

திரு சுப. வீர பாண்டியன் அவர்களின் பாஞ்சாலத்திற்கு ஒரு நீதி, பைந்தமிழ் நாட்டிற்கொரு நீதியா என்ற கட்டுரை படித்தேன். அவரது குமுறல் மிகவும் நியாமானதொன்று.

பஞ்சாபியர், கன்னடர், மராத்தியர் மற்றும் தெலுங்கர் நடத்திய மாநாடுகளையும், அதற்கு மைய அரசு செய்த உதவிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டு தமிழென்றால் அதே அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கினையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றார். தமிழ் விழாக்களென்றால் பாரபட்சமாய் நடவடிக்கைகளை எடுத்து வரும் மைய அரசினை கண்டிக்க அந்நாளைய மாநில அரசுகள் முன் வராத கயமைத்தன்மையையும் அவர் சாடத் தவறவில்லை. இருப்பினும் முத்தாய்ப்பாய் அவர் கூறியது சிறிதே ஆச்சர்யம் தருகின்றது. "இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகவே பார்க்குமானால், தமிழர்களும் இந்திய அரசை அந்நியமாகத்தானே பார்க்க முடியும்?" இதுதான் சுப.வீ. கட்டுரையின் சாரம்சமா? இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகப் பார்க்க காரணமென்ன? 'வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றதென்ற' வாதத்திற்கு இன்றும் வலுவுண்டா?

தனிக்கட்சி ஆட்சியென்று இல்லாமல் மத்தியிலே கூட்டாட்சி என்பதே இன்றைய நிதர்சனமாகிப் போனது. பிராந்தியக் கட்சிகளின் பேச்சு மத்தியில் எடுபடும் காலத்தில் பிரிவினையால் விளையும் பயன்தான் என்ன? தமிழை 'செம்மொழி'யாக்கி 'வரலாற்று சாதனை' படைத்த கால கட்டத்தில் பேசும் பேச்சா இது? சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த மைய அரசும் செய்ய விரும்பாத அல்லது செய்ய மறுத்த 'செயற்கரிய செயல்' அல்லவா இச்சாதனை? இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இலங்கைக்கு படை அனுப்ப மாட்டோம் மென்று 'சுயம்பு வெளியுறவுத்துறை அமைச்சரான' திரு வைகோ மூலம் கருத்து தெரிவித்ததாய் ஊடகங்கள் வாயிலாக அறிய நேர்ந்தேன். ஆஹா...இன்று தமிழனின் 'பவர்' மையத்தில் எப்படிப்பட்டதென்று கண்டிப்பாய் சுப.வீ அறிந்திருப்பார். இன்று மட்டும் உலகத்தமிழ் மாநாடோ, சைவ விழாவோ, முருகன் விழாவோ நடத்துவதாய் இப்போதைய தமிழகத் தலைவர் யாராவது அறிவிக்கட்டும். பின்னர் பாருங்கள் சுப.வீ... பகை நாடென்ன, நம்மைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கும் நகை நாடுகளிலிருந்து கூட 'தமிழர்கள்' கலந்து கொள்ள மத்திய அரசு ஆவன செய்யும். தன் கையால் குத்து விளக்கேற்றி பிரதம மந்திரி அவர்கள் ஓரிரு வார்த்தைகள் உடைந்த தமிழும் பேசுவார். அப்புறம் தமிழுணர்வு தானாக வளரலாம். பிறகெதற்கு பிரிவினை எச்சரிக்கை?

எட்டு கோடி தமிழர்களின் எடுப்பாய் செயல்பட வேண்டிய ஆளும் மாநில கட்சிகளின் நிலைப்பாடே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம். சுப.வீ அவர்களின் கட்டுரைப்படி தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைக்காலத்தில் கழகங்களே மாறி மாறி ஆட்சி செய்தன. எதற்கெல்லாமோ 'அடைப்பு' நடத்தி தினவாழக்கையை பாழடித்த கழகங்கள் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டும் காந்தாரியாய் கண்கள் கட்டி இருந்த ரகசியமென்ன? இன்று திடீரென்று தமிழ்ப்பற்றுடன் உலவும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவரது முன்னாள் உடன் பிறவா சகோதரி ஜெயலலிதா அவர்கள் தமிழ் கொடுமைக்கெதிராக என்ன செய்தார்கள்? அவரது தற்போதைய உடன் பிறவா சகோதரர் திரு. தொல்மா என்ன செய்தார்? கள்ளத்தோணி ஏறிச் சென்று தனது 'நாட்டுப் பற்றை' பறைசாற்றிய திரு. வைகோ'வாவது பரவாயில்லை. தமிழுக்கு மற்றும் தமிழருக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து அவ்வப்போது குரல் கொடுத்தார். அவரது பேச்சும் தமிழ்நாட்டின் பிரிவினையை ஒட்டி அமைந்ததில் வியப்பில்லை. 'போடா' சட்டத்திற்கு அரசாங்கமே 'போடா' சொன்ன பின்னர் இப்போது பல அரசியல்வாதிகளும் தைரியமாக தமிழுக்கு நிகழ்ந்த கொடுமைகளை உணர்ச்சிப் பூர்வமாக பேச முன் வருவார்கள். சுப. வீ நினைப்பது போல் அப்போது தமிழுக்கு நேர்ந்த இழுக்குகள் துடைக்கப் படலாம். கனவு காண்பதென்பது தமிழனின் பிறப்புரிமை. வாருங்கள் கண்களை அகல விரித்து கனவு காண்போம்.

நமது தமிழனின் இன்னொரு தனிச்சிறப்பு 'தனிமனித தோப்புகளாக' வாழ்வதுதான். இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் இணைந்தால் வேறொரு தமிழனைக் கவிழ்ப்பதற்காகவென்று அவதானித்துக் கொள்ளலாம். பிரதமராக திரு. மூப்பனார் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியபோது நமது தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை நமக்குத் தெரிந்த விஷயம்தானே? மலிவான அரசியல் காரணங்கள், சுயலாபங்கள், தனிமனித துதிகள் போன்றவையே தமிழ்த் தலைவர்களின் ஆக்கங்கள் என்றாகிவிட்டது. காவிரி நீர்ப்பிரச்சினையில் நமது மாண்புமிகு MP'க்கள் மற்றும் MLA'க்களின் செயல்பாடுகள் நாடறிந்ததுதானே? இன்று தமிழக மத்திய மந்திரிகளின் துறைகள் எவ்வாறு பெறப்பட்டன? எதிர்காலத்தில் 'மாநிலத்தை' ஆள வேண்டிப் போடப்பட்ட அச்சாரம்தானே இப்போதைய மாநில கூட்டணிகள்? இவர்கள்தான் தமிழுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி கவலைப்பட போகின்றார்கள்?

மத்திய அரசாங்கத்தில் முன்னெப்போதுமின்றி அதிகபட்சமாக தமிழக அமைச்சர்கள் இப்போது இருக்கின்றார்கள். இருப்பினும் தமிழ்க்கொடுமைகளை நினைத்து தனித் தமிழ்நாடு அடைந்தோமென்றே வைத்துக் கொள்வோம். இதே கழகத் தலைவர்கள் தனித்தமிழ்நாட்டை ஆண்டால் நாமிழந்த தமிழ் உணர்வுகள் தழைத்து விடுமா? மாறாக தமிழ்நாட்டினையே அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது போலாகாதா? இந்தி தெரிந்தால் மத்திய மந்திரி வாய்ப்புக் கிட்டுமென்பது கலைஞர் குடும்பத்தில் தான் நடக்கும். அதற்காக தமிழ் தெரிந்தவர்கள் விசனப்பட தேவையில்லை. கழகங்களுக்கு மாற்று கூட்டணி ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றது. மாற்றான் தோளிலேயே சவாரி செய்து பழக்கப்பட்ட காங்கிரஸோ சொந்தக் கால்களையே மறந்து விட்டது. உதிரிக் கட்சிகளோ 'கழகங்களின் சத்துணவில்' காலமோட்டுகின்றது. எனவே இந்திய அரசு தமிழர்களை அந்நியப்படுத்துகின்றது என்று கூறுவதைவிட நமது தமிழ் அரசியல் தலைவர்களே நம்மை அந்நியப்படுத்திவிட்டார்கள் என்பதே சரி. இந்தியாவுடன் கூடியிருக்கும் போதே கொண்டாட்டம் போடும் இந்தக் கழைக்கூத்தாடிகளிடம் பிரிந்த தமிழ்நாட்டினைக் வேறு கொடுக்க வேண்டுமா?

இப்போதைய உடனடித் தேவை தமிழுக்கென்று ஒரு மாநாடல்ல. 'தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா' என்ற ஏட்டளவுப் பெருமைமையை நடைமுறைப் படுத்த அனைத்து தமிழரும் முயலவேண்டும். இதற்காக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ஆரவாரம் செய்ய வேண்டாம். கூட்டம் கூட்டி பிரிவினைக் கோஷமும் போடவேண்டாம். அரசியல் பேதமின்றி அனைத்து தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் ஒன்று கூடி நம்மிடையே தமிழுணர்வு வளர்க்க நடைமுறைப் படுத்தக் கூடிய 'செயல்முறைத் திட்டம்' ஒன்றினை வரையலாம். இன்றைய தொழில் சார்ந்த நவீன கல்வி முறையில் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழ் ஆசான்களின் பங்களிப்பு இம்முயற்சிக்கு பெரிதும் உதவும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தனிப்பாட வருமானமுமின்றி, கூலிக்கு மாரடிக்காமல் உண்மையாய் தமிழ் புகட்டும் ஆசான்கள் இன்னும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டு மாணவ சமுதாயத்திடையே மீண்டும் தமிழுணர்வு புகட்டப்பட வேண்டும். அதை விடுத்து மூலையில் உட்கார்ந்து 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று முகாரி பாடுவதால் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

இன்று கணித்துறை வளர்ந்து விருட்சமாய் நிற்கின்றது. இத்துறையால் நன்மைகள் மற்றும் தீமைகள் கலந்தே உள்ளன. இணையத்திலும், வலைப்பூக்களிலும் சத்தமின்றி ஒரு 'தமிழ்ப் புரட்சி' நடந்து வருகின்றது. வருமானமோ, லாபமோ பாராமல் சிலநேரங்களில் தங்கள் கைக்காசைப் போட்டு பலர் இணைய தமிழின் வளர்ச்சிக்கு தேவையான எழுத்துருக்கள், செயலிகள், நிரலிகள் என்று உருவாக்கிப் பாடுபடுகின்றார்கள். அச்சு ஊடகங்களில் இல்லாத இந்த இணைய கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக எதிர்கால தமிழ் மற்றும் தமிழுணர்வு வளர கண்டிப்பாக உதவும்.

அதன் தீமையாக தமிழறிவு சோறு போடுமா என்று கூசாமல் பேசும் 'வல்லுநர்களை'யும் இந்நாளில் காணலாம். ஆனால் ஆங்கிலம் குறைவாகவே அறிந்த சீனாவில், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கிளைகளைத் திறக்கின்றன. கணிபொறி செய்யும் IBM நிறுவனக் கிளையன்றை லெனோவா என்ற சீன நிறுவனம் வாங்கியிருக்கின்றது. இதெல்லாம் தமிழறிவு சோறு போடுமாவென்று குதர்க்கம் பேசும் அந்த 'வல்லுநர்களின்' கண்களுக்கு தெரியாமலில்லை. மெல்ல அவர்களும் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் பன்னாட்டு நிறுவனமொன்றின் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' (Customer Call Center) வயிறு கழுவலாமென்று நினைக்கும் இன்றைய இளைய சமுதாயத்தில் தமிழுணர்வை உடனடியாக ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. ஆனால் மணி கட்ட வேண்டிய தருணமிது. ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயல்பட ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் முன் வருமா?

Wednesday, December 01, 2004

Hum Tum (நானும் நீயும்) 05/28/04

C:\Sam\Blog\New Items\humtum1
மெல்லிய காதல் கதையை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கலந்து 'ரிச்சாகக்' கொடுப்பது இந்தித் திரையுலகிற்கு புதிதில்லை. அரைத்த மசாலாவையே மீண்டும் அரைப்பதிற்கு கோலிவுட்டிற்கு சற்றும் சளைத்ததில்லை பாலிவுட். இப்படத்திலும் நாயகர், நாயகி நியூயார்க் பயணிக்கும் போது ஆரம்பத்திலேயே ஏற்படும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் கரண் கபூர் (செய்ப் அலி கான்) மற்றும் ரியா (ராணி முகர்ஜி) ஆம்ஸ்டெர்டாமில் ஆறு மணி நேரம் ஒன்றாக செலவிட நேருகின்றது. வாழ்க்கையை பார்ப்பதில் கரணுக்கும், ரியாவுக்கும் ஒற்றுமை என்பது எள்ளளவும் கிடையாது. 'எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்' என்ற பழமைத் தத்துவம் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்குமே! இருப்பினும் கதையை சின்ன சின்ன சம்பவங்கள் மூலம் அலுப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றிருக்கும் பாங்கு அலாதியானது. குணால் கோலியின் இயக்கத்தில் யாஷ் ராஜ் பேனரில் வெளியான மற்றுமொரு வெற்றிச் சித்திரமே ஹம் தும்.

கரணுக்கு நாடுகள், மதங்கள் போன்ற உலகப் பிரிவினைகளைவிட ஆண்-பெண் வேற்றுமையே பெரிதாகப் படுகின்றது. இக்கருத்தையே தனது ஹம் தும் என்ற கேலிச்சித்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றான். இக்கார்ட்டூன் முன்னணி நாளிதழில் வெளியாகி புகழும் பெறுகின்றது. திரைப்படத்தில் தேவைப்படும்போது கேலிச்சித்திரத்தின் பாத்திரங்களே கதையை நகர்த்துவது வித்தியாச முயற்சி.

ஆர்ம்ஸ்டர்டாமில் விளையாட்டாய் (நட்பாய்?) கரண், ரியாவை முத்தமிடுகின்றான். பிறகென்ன கன்னம் பழுக்கின்றது. அதிலிருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கின்றது.

பிளாஷ்பேக் பார்த்தே அலுத்துப்போன ரசிகப் பெருமக்களுக்களை கருத்தில் கொண்டு ஆறு மாதங்கள்/ஒரு வருடம்/ பத்து வருடங்கள் கழித்துதென்று படம் எதிர்காலத்திலேயே பயணிக்கின்றது. இக்காலகட்டத்தில் ரியாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சற்றே யூகிக்கும்படியிருந்தாலும் அதிக சினிமாத்தனம் கலக்காமல் இயல்பாய் இருக்கின்றது. முக்கால்வாசிப்படத்தில் வழக்கமான 'சாக்லேட் ஹீரோ' பிம்பத்தை தக்க வைத்து மீதிப் பகுதியில் முதிர்ச்சியான இளைஞனாக கரண் வேடத்தை செய்ப் அருமையாகச் செய்திருக்கின்றார். ராணியும் சளைக்காமல் நடிப்பில் ஈடு கொடுக்கின்றார்.
அவ்வப்போது ஆண்-பெண் உறவுமுறையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு கேலிச்சித்திரம் மூலம் விடை கொடுப்பது அசத்தல். உதாரணமாக 'வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்ணிருப்பாள் என்பது உண்மைதான். வெற்றி பெறாத ஆணை எந்தப் பெண் விரட்டப் போகின்றாள்?'

சிறப்பு வேடத்தில் செய்ப்பின் அப்பாவாக ரிஷி கபூரும், நட்புக்காக அபிஷேக் பச்சனும் வந்து போகின்றனர்.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் பில்லி கிரிஸ்டல் மற்றும் மெக் ரையான் நடித்த ‘When Harry Met Sally’ படத்தின் வாடை அடிக்கலாம். ஆனால் பாலிவுட்/கோலிவுட்டில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரமல்லவா? கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். கடைசி அரைமணி நேரம் இழுவை தேவையில்லை.

அசம்பாவிதங்கள் தாண்டி கரணும், ரியாவும் இணைகின்றார்களா என்பதை வெள்ளித்திரையில் காணவும். (இப்படித்தான் சினிமா விமர்சனத்தை முடிக்க வேண்டுமென யார் சொன்னதென்று நறநறக்க வேண்டாம்!)