Monday, May 31, 2004

காதல் வைரம்

அகல உழுவதை விட
ஆழ உழுவது நன்று
வயலுக்கான வரிகள்
வாழ்க்கைக்கு ஒத்ததா?

ஆயினும்...
ஆழ உழுதாள்
அழுது பு(வி)தைத்தேன்
காதல் கரித்துண்டு

கண்ணீர் மழையுடன்
இயலாமை வெப்பம்
கலந்து பாய
கனன்றது கரித்துண்டு

அறுவடை நாளில்
அறுத்தேன் இதயத்தை
தெளிந்த நீரோட்டமாய்
தெரிந்தது வைரம்

காதல் பரிசெனெ
கழுத்தில் அணிவேனோ?
காசு பெறாதெனெ
தூசாய்க் களைவேனோ?

ஜெர்மனி போதும் தோழா...

இந்தியப் பதிப்புக் கொடு என்பவர்க்கு...வாருங்கள்...1971'ல் நிகழ்ந்த நாடகத்தைப் பார்ப்போம்.

Sunday, May 30, 2004

நான்கு பொறுமைசாலிகள் சரித்திரப் பதிவைப் படித்து, பாராட்டவும் செய்தனர். பயமுடந்தான் இந்த முயற்சியிலேயே ஈடுபட்டேன். இதோ இன்னொரு பதிவு. இம்முறை நீருக்கு கீழே...ஆம் U-படகுகள் (நீர்மூழ்கிகள்). வழக்கம் போல் உங்கள் விமர்சனத்தைப் பதிவு செய்யுங்கள்.

Saturday, May 29, 2004

நீங்கள் பொறுமைசாலிகளா?

சரித்திரம் புரட்டிப் பார்க்க ஆசையா? வாருங்கள்...ஜெர்மனியின் பிஸ்மார்க்கிலிருந்து தொடங்குகிறேன்.

குளம்பொலி தொடர உங்கள் ஆதரவையும், ஆசியையும் நாடுகிறேன்.

Thursday, May 27, 2004

மௌனம் கலைத்த நண்பனுக்கு,

முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். இந்தியா வந்தபின் தொலைபேசியில் கூட தொல்லை கொடுக்காதமைக்கு...(ஆமாம் இதை இணையத்தில் பதிவு செய்ய வேண்டுமா... என்ன???)

உனது எதிர்பார்ப்புகளை நான் குறை கூறவில்லை. கூறிய விதம்தான் சிறிது கீறிப் பார்த்தது. ஒரே ஒரு விண்ணப்பம். எழுத்தில் எனக்கு மூத்தவன் நீ. உனது "கலைந்த மௌனம்" பதிவு "ஏன் மௌனம்" பதிவைவிட எங்கேயோ போய்விட்டது. சில சமயம் விலாவாரியாக எழுதினால் சொல்ல வந்த கரு நீர்த்துப்போகும். ஒத்துக்கொள்கிறேன். நீ எடுத்துக்கொண்டது உணர்வுப்பூர்வமானது. வேறு வழியில்லை. விலா-வ(¡)ரியாகத்தான் எழுத வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்து.


எங்கே வாழ்ந்தாலும், மடிந்தாலும் நான் ஒரு இந்தியன். பட்டம் பெற்ற பின்னர் ஏழு வருடங்கள், எனது துடிப்பான பருவத்தை நான் பன்னாட்டு நிறுவனத்தில் கழிக்கவில்லை. கப்பற்படையில் இருந்தேன். அதற்காக மேற்கண்ட கருத்தை நான் கூறவில்லை. ஒவ்வொரு இந்தியன் மனதிலும் "எங்கே வாழ்ந்தாலும், மடிந்தாலும் நான் ஒரு இந்தியன்" பிரதிபலிக்க வேண்டும். இல்லாவிடில் "வாழ்தலின் சாதல் நன்று". நான் விஷமத்தனம் என்று குறிப்பட்டது எனது வேதனையால்தான்.

திரவியமோ, பச்சை அட்டையோ பிரதானமாகப் போனவர் வலையில் வலம் வரமாட்டார். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும் மாட்டார். விதிவிலக்குண்டு. பொழுதுபோக்குத் தமிழ் பேச நான் இந்த ஊடகத்திற்கு வரவில்லை.

நீ குறிப்பிட்ட சாபக்கேடுகள் முற்றிலும் உண்மை. கண்டிப்பாக அது குறித்து எனது எண்ணங்களைப் பதிவு செய்வேன். பதிவு செய்யாமை எனது தவறெனச் சொல். திருத்திக்கொள்கிறேன். அதைவிடுத்து பயமா, விசுவாசமா, பச்சை அட்டையாவெனக் கிண்டாதே. வேதனைப்படுவேன்.

புலம் பெயர்ந்த நாடுகளைப் (குறிப்பாக அமெரிக்கா) பற்றி எழுதினால் பிறர் படிக்கமாட்டார் என்பதை விட, தந்நாட்டைப் பற்றியெழுதுவதில் (முன்னேற வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்ற ஆசையில்/ஆதங்கத்தில்) பலர்க்கு ஆர்வம். அதில் தவறில்லை.

ஒட்டுமொத்தமாகப் புலம் பெயர்ந்தவர்கள் ஊடகம் வாயிலாய்த்தான் இந்தியாவைப் பதிவு செய்கிறாரென முடிவு கட்டாதே. அரசியல்வாதியை கிண்டலடிக்கும் பதிவிலும் (முன்னேற வேண்டும், முன்னேற்ற வேண்டுமெனும்) ஆதங்கம் மேலோடியிருக்கும்.

இந்திய தேசத்திற்கு அமெரிக்க பூனைகளால் ஆபத்தென்றால் மணி கட்ட அழைக்காதே... அது அசிங்கம்...சாவு மணி கட்ட அழை...அது சிங்கம்...

Tuesday, May 25, 2004

நிதர்சனம் (55 வார்த்தை சிறுகதை)

"எல்லாமே போதும்னு தோணுதுடா. எவ்வளவு நாள்தான் இப்படி சொந்தபந்தத்தை பிரிந்து கஷ்டப்படறது?"

அனுதாபமாய்ப் பார்த்தேன். உற்றாரைப் பிரிந்து அயல்நாட்டில் உழழும் எவர்க்குமே தோன்றும் இயல்பான உணர்வு. அதுவும் எடுபிடி வேலையெனில் நிதமும் தோன்றும்.

"சொந்த ஊரில் பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்வேன். பொண்டாட்டி புள்ளைய வருஷக்கணக்கா பாக்காம இருப்பதைவிட சாபக்கேடு எதுவுமேயில்லைடா..."

எனக்கு பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. எனக்கும் சேர்த்துதான் அவனே பேசிவிட்டானே...

ஒருவழியாய் போன்லைன் கிடைத்து வீட்டில் பேசித் திரும்பியவன் சொன்னான்...

"அம்மாவுக்கு புற்று நோயாம்டா..."
எங்கள் அண்ணா (55 வார்த்தை சிறுகதை)

"அண்ணே என்ன இருந்தாலும் எதிர்க்கட்சி இப்படி பேசக்கூடாதண்ணே..."

"பேசாம விடுடா...நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கோ"

என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏழைகளின் வயிற்றிலடிக்கும் கந்துவட்டிகாரருக்கு சாவுமணிச் சட்டம், லாட்டரி ஒழிப்பு, கள்ளச்சாராயம் அழிப்பு, போதைப் பாக்குக்கு பொடா, பொதுவிடத்தில் புகைக்கு தடா இன்னும் பல சாதனைகள் என் அண்ணாச்சிக்காக எடுத்துவிட முடியும். ஊரை அடித்து உலையில் போடும் உலகில் இப்படியும் ஒரு மந்திரியா? வயிறெரிந்தது.

"எப்படியெண்ணே உங்களாள முடிஞ்சது???"

"பேரம் படியலடா"

எனக்கு மறுபடியும் வயிறெரிந்தது.
முத்து

மூழ்கியவன் முட்டாள்
மூச்சடக்கியவன் மூதறிஞன்
காதல்!!!

Monday, May 24, 2004

தனயன் (55 வார்த்தை சிறுகதை)

நினைக்கையில் எரிச்சலாய் வந்தது. என்னமாய் பிளான் பண்ணி வீட்டிலிருந்து காசு சுட்டு தலைவரின் பத்திரிக்கை வாங்கச் சென்றால் அனைத்து பிரதிகளும் விற்று தீர்ந்துவிட்டனவாம். இத்தனைக்கும் கடைகாரனிடம் சொல்லி வைத்திருந்தேன். அய்யோ...புதிய படச் செய்திகளுடன் பல போட்டோக்களும் வந்திருக்குமே. யார் கண்டா? கதைச்சுருக்கங்கூட இருந்திருக்கலாம். எவ்வளவு நாட்கள் கழித்து தலைவரின் படம்? அறிமுக கெட்டப்பே தூளாய் இருந்துச்சே!!! அந்தக் கடைக்காரன் வீட்டில் இழவு விழ...

"என்னடா பண்றே?" வீட்டினுள் நுழைந்த அப்பாவிடம் சொன்னேன்.

"நாளைய பரீட்சைக்கு படிக்கிறேம்ப்பா!"
வீட்டுக்கு வீடு (55 வார்த்தை சிறுகதை)

எனக்கு பொங்கிக்கொண்டு வந்தது. எம்மகன் பொண்டாட்டி வந்ததும் சுத்தமாக மாறிவிட்டிருந்தான். என்ன சொன்னாலும் இப்போது கேட்பதேயில்லை. என்னதான் தலையணை மந்திரமோ? எப்படியிருந்தவன் இப்படியாகி விட்டான்...

எதுவாகிலும் தங்கைக்கு ஒரு தேவையெனில் தமையன் கவனிக்க வேண்டாமோ? எவ்வளவு பணம் கேட்டுவிட்டாள்? எதற்கெடுத்தாலும் எகத்தாளமான பதில். எல்லாம் வந்தவளைச் சொல்ல வேண்டும். எம்பெருமானே...இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இன்னும் எவ்வளவு நாள் வைக்கப் போகிறாயோ?
எந்த வழியுமேயில்லையா என்று மகளை ஏறிட்ட போது சொன்னாள்...
"அம்மா பேச்சைக் கேட்டு ஆடறார்ம்மா"

Sunday, May 23, 2004

சொல்ல மறந்த கவிதை


பொங்கல் மறந்து
பீட்ஜா சாப்பிடும் பீடைகள்

பச்சை அட்டைக்காக
பலவும் துணிந்த பாவிகள்

மானமிழந்து தூதரகம் முன்னர்
விசாத் தவம் கிடந்த வீணர்கள்

நுனி நாக்கு ஆங்கிலம் பேசி
பொழுது போக்கு தமிழ் வளர்ப்பவர்கள்

தன்னையே அடகு வைத்து
டாலருக்கு சோரம்போன டாம்பீகர்கள்

கோக் பெப்சி குடித்து
காளிமார்க் தூற்றும் கபோதிகள்

திரைகடலோடி டமில் மழலைச்
செல்வங்கள் சேர்த்த ஓடுகாலிகள்

புரியாமல் வசைகள் பாடியிருப்பேனோ?
புலம் பெயரா விட்டால்...

பி.கு. தற்போது நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் கிட்டிய வசைகளில் சிலவற்றை உபயதாரர்கள் முன் அனுமதியின்றி உபயோகித்து இருக்கின்றேன்.

Saturday, May 22, 2004

ஹைக்கூ
எனக்கு ஹைக்கூ பற்றி விதிகள் புரியாது. விதி தெரிந்தவர் யாரேனும் இந்தக் கவிதைகள் ஹைக்கூதானா என்று விளக்குவார்களா?

காவு

தினக்கூலி
திரைப்படம்
கந்துவட்டி

போராட்டம்

அந்நியனே வெளியேறு
அமெரிக்கா விசா
செப்டம்பர் 11

விவா(த)கம்

மாற்றான் தோட்டம்
மல்லிகை மணம்
விவாகரத்து
மௌனம் க(கொ/தொ)லைக்கிறேன்

இனிய நண்பன் ராஜ்குமாருக்கு,

நான்காண்டுகளாக அமெரிக்காவில் வாழும் ஞானம் எழுதிக் கொண்டது.

உன் மன வானில் மௌனம் கலைத்த மடல் கண்டேன்.

வேலை செய்யும் நாட்டிற்கு விசுவாசம்/பயம் மற்றும் இந்திய நாட்டுப் பற்று, இரண்டையும் அமெரிக்கஅரசியல் அலசப்படாமைக்கு காரணங்களோ என வினா எழுப்பி உள்ளாய்.

எனது குறுகிய வலை அனுபவத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை அங்கீகரித்து எந்தப் பதிவையும் நான் படிக்கவில்லை. அப்படி ஏதேனும் நீ பார்த்திருந்தால் பார்வைக்கு அனுப்பு...

அமெரிக்கா யுத்தம் அறிவித்த சில நாட்களில், நமது அண்டை நாட்டின் கூலிப்படையினர் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர். பின்னர் நடந்ததை உலகம் அறியும். எனது வெள்ளை அதிகாரி ஒரு விருந்தில், அமெரிக்க யுத்தம் பற்றி இந்தியக் கருத்துக் கேட்டார். ஐம்பது ஆண்டுகளாய் பாகிஸ்தானின் தீவிரவாதத்தால் அவதிப்பட்டு, இன்று பாராளுமன்றம் வரை பாதகர் வந்துவிட்டாலும், அமைதி காக்க வேண்டும் என்று அமெரிக்கா சொல்கிறது. அதேதான் எம் பதிலும் உமக்கு என்றேன். இதை வலைப்பதிவு செய்யாமைக்கு, வேலை செய்யும் நாட்டிற்கு விசுவாசம்/பயம் (VP) முத்திரையா?

நான் அயல் நாட்டில் வேலை செய்துவரும் வலைஞர்களின் பிரதிநிதியாகப் பேசவில்லை. எனக்கு கிடைக்கும் அரிதான தருணங்களில் எனது நாட்டு நடப்புகளை படித்து, ஆக்கப்பூர்வ கருத்துகளோ, ஆற்றாமையோ வலை மூலம் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. "என் நாடு, என் மக்கள்" என இருந்தால் அதற்கும் VP முத்திரையா? கோ.சி. மணியின் லீலைகளை வலைப்பதிவு செய்யும் நண்பன் சுந்தர், அமெரிக்காவின் க்ளிண்டனைப் பற்றி எழுதாமைக்கு பயமோ, விசுவாசமோ, பச்சை அட்டையையோ காரணமாய்க் காட்ட மாட்டேன். இதே சுந்தரின் ஆப்கானிய யுத்தம் பற்றி "தினம் ஒரு கவிதை" பதிவை நீ படிக்கவில்லை போலிருக்கிறது.

வரலாறு அறியாதவரா நாம்? உலகில் தீவிரவாதம் வளர நீரூற்றி, இன்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் துடிக்கிறது அமெரிக்கா. மனித உரிமைகளை நேற்று இன்றா மீறுகின்றது? வியட்நாமின் "நேபாம் குண்டுகள்", ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, கியூபா தலையீடு, பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு அனுமதி, பாகிஸ்தானுக்கு பண முடிப்பு, ஈரானில் உன்னாட்டுக் குழப்பம், ஈராக் யுத்தம் என்று எழுதிக் கொண்டே போகலாம். இவ்வளவு ஏன்? டாலர் தேசம் தொடர் படிக்கும் உனக்கு, "அடிமைக் கலாச்சாரம், அமெரிக்கா கலாச்சாரம்" என்று சொல்லித் தெரிவதில்லை.

அமெரிக்காவில் கருத்து/எழுத்து சுதந்திரம், வர்த்தகக் கொள்கைகள், மனித உரிமை மீறல்கள், எதேச்சதிகாரப் போக்கு பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அமெரிக்காவின் தேர்தலைப் பற்றியும் எழுதக் கேள். அது நியாயம். அதென்ன "தைரியமாய்" எழுதுங்கள் என்ற கோரிக்கை? பச்சை அட்டைக்கும் அமெரிக்க பூனைக்கு மணி கட்டுவதற்கும் என்ன சம்பந்தம்? "நீங்கள் யார் பக்கம்" என்ற விஷமத்தனமான கேள்வி எதற்கு?

நீங்கள் இந்தியா பக்கம் என்றால், அயல் நாட்டில் (குறிப்பாக அமெரிக்காவில்) ஏன் பணி புரிய வேண்டும் என்று "மாலன்" தனமான கேள்விகள் எழலாம். வேறு யாரேனும் விடையளிக்க விரும்புகிறீர்களா?

தேசப்பற்று என்பது பொதுவுடைமை. ஏதோ இந்தியாவில் வாழும் இந்தியர்க்கு மட்டும் தனியுடைமை அல்ல. இது எனது தாழ்மையான கருத்து.
தாய்க்கு தலைமகன்

இந்திய வரைபடத்தில்
இல்லாத எல்லையோர
காவல் படை முகாம்

அதிகாலை நேரம்
நேற்றைய ரம்
இன்னும் இறங்காத நேரம்

கதவு இடிக்கப்பட்டது
மங்கலாய் தெரிந்தான்
நண்பன்

அப்பா போயிட்டாருடா...
ஆடிப்போனேன்

நாலரைக்கு முதல் வண்டி

மேலதிகாரியிடம் பேசி
வெற்று விண்ணப்பத்தில்
விடுமுறை ஒப்பம் வாங்கி
அக்கம் பக்கம் காசு தேற்றி
புகைவண்டிக்கு கப்பம் கட்டி...

ஊருக்குப் போனதும் பேசுடா
காற்றில் கரைந்த சொற்கள்
இரண்டரை நாட்களுக்குப் பின்
பேசினான்...
மூளையில் ஏதோ
பெயர் புரியா வியாதியாம்

அண்ணா வந்துட்டாராடா...?

கிரீன் கார்டு கிட்ட
முக்கியக் கட்டமாம்
வர முடியாதாம்

நல்ல வேளை
நம்ம ஊரில்
தாய்க்குத்தானே தலைமகன்...
சின்ன சிந்தனைகள் தொடரில் சுஜாதா சொன்ன 55 வார்த்தைகளில் 2 சிறுகதைகள்

புகழ்

உலகின் மிகவும் பிரபலமான்வர்க்குண்டான பிரச்சினைகள் எனக்கு அத்துப்படி. தினமும் ஆட்டோகிராப் வாங்க வரும் கூட்டத்திற்கு அளவில்லை. எனக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாதெனலாம். வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். எதற்குமே முகம் சுளிக்காமல் அனைவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கற்றுக்கொடுத்தார்கள்.

இருப்பினும் புகழ்போதை உச்சியிலேறி நான் யார் தெரியுமாவென மமதையுடன் கேட்டதேயில்லை.

அன்றும் வழக்கம்போல பணிமுடிந்து இல்லம் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. டிஸ்னிலேண்ட் உடைமாற்றும் இடத்தில் எனது மிக்கி சீருடை சிரித்துக்கொண்டிருந்தது.


சிரமம்

அம்மா அடிக்கடி சொல்வாள். சின்ன வயதில் நான் செத்து பிழைத்த கதையை.

கக்குவான் இருமல், விதவிதமான காய்ச்சலென்று சொல்லிக்கொண்டே போவாள். பார்க்காத வைத்தியமில்லை. நாட்டு வைத்தியரிலிருந்து ஹோமியோபதி, ஆங்கிலம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நரைபுரை தட்டியபோதும் தன் வேலைகளை தட்டுதடுமாறி தானே செய்வாள். எவ்வளவோ சொல்லியும் கேட்டதேயில்லை. பதிலுக்கு ஏதேனும் செய்ய என் மனம் பரிதவித்ததுண்டு.

நண்பன் தோளை தட்டியதும் திரும்பினேன். "புண்ணியாத்மா... சிரமம் கொடுக்காம போயிட்டா"

சிரமப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் வந்தது.

Friday, May 21, 2004

இது எனது இரண்டாவது எழுத்துப் பயணம். பிள்ளையார் சுழி போடுவது போல் நல்லவர்களைப் பற்றி நாலு வார்த்தைகளை கூறி தொடங்குகிறேன் பயணத்தை !!!

மு.ராசுக்குமார்

அழகப்பா மாதிரி மேனிலைப் பள்ளியில் பயிலும்போது இருவருக்கும் பொதுவான தமிழ் ஆசான் அழகப்பத் தமிழன். கையெழுத்துப் பிரதியை கற்று தந்த ஆசான்.

எட்டாம் வகுப்பிலிருந்து ராசு என் இனிய எதிரி. இவனது "இன்னொரு தேசியகீதம்" கவிதைதான் என்னை எழுதத் தூண்டியது. ராசுவைப் போல் முடியுமாவென வினாவுமெழுப்பியது. முதல் எழுத்துப் பயணத்தில் ஏகலைவனைப் போல் நான் ஏங்கிய காலம் பல. எங்களின் வருடாந்திர பள்ளி/கல்லூரி வாழ்க்கையின் கலைப் போட்டிக் கதையை "உள்ளே வெளியே" பார்த்தால் இன்னொரு "இருவர்" படம் விரியும்.

இவனை இப்போது நான் சபிப்பது எல்லாம் "எழுத்துச் சோம்பல் மரிக்கக் கடவதாக..."

ப. சுந்தர்ராசன்

கல்லூரி வாழ்க்கையில் செல்லமாய் சுள்ளான். எழுத்தில் இவனது பரிணாம வளர்ச்சி என்னை பிரமிப்பு ஊட்டுகிறது. செயலிகளை எனக்கு அறிமுகமாக்கி, இன்னொருமொருறை வலம் வர வைத்த "சாமி".

நான் என்றுமே ஏகலைவன்தானா? எனது இரண்டாவது எழுத்துப் பயணத்தின் மூலகர்த்தாவே... வந்தது கோபம்...பிடி சாபம்... "உனது கணிணி விரல்களின் களியாட்டம் என்றும் தொடரட்டும்"

பி.எம்.சுரேஷ் பாபு (இந்தப் புனிதனுக்காக நான் எந்த எல்லைக் கோடுகளும் தாண்டுவேன். தூய தமிழ்க் கொலை உட்பட...)

வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தவன் (நச்சென்று நாலே வார்த்தை. வேலி தாண்டாமல்...வித்தியாசமாய்...)

பயணம் தொடரும்....