Sunday, April 10, 2005

ஆடிப் பிம்பங்கள்

இடவலமாய்ப் பிரித்துப் போட்டாலும்
உயர்வுமனப் பிறள்வு உடைந்த நேரம்
பாதரசப் பூச்சு பல்லிளித்தாலும்
பிம்பத்தில் முதல் திடுக்கிடல்

கனவுக்கும் நனவிற்கும் நடுவே
கட்டமைத்த பிம்பமா இது?
முக அளவிலேயே முற்றும் போடத் தோன்றியது
ஆளுயரத்திற்கு அவசியமில்லை

அகத்தின் அழகினை முகப்பூச்சால் மெருகேற்றி
அயலானை அங்கலாய்க்க வைத்து
வாழ்க்கையில் ஏமாந்தது யார்?
ஏமாற்றியது யார்?

நரையென்பது நிறையா குறையா?
இறுக்கம் தளர்ந்த தசைநார்கள் சிரிக்கின்றன
காய்ந்த சருகொன்று காற்றினில் உதிர
ஆடிப்பிம்பமொன்று உடைந்து போனது
சிதறிய ஒவ்வொரு சில்லிலும்
தொலைத்த வாழ்க்கையின் பிம்பம்

Tuesday, March 08, 2005

நிதர்சன நட்பு

பறை இழந்தவன் கைபோலே
வள்ளுவன் எழுதா வாக்கியம்
அரைஞாண் அரணில் கோவணம்

Sunday, February 27, 2005

இயந்திர நட்டங்கள்

எங்கேயோ பார்த்து ரசித்தது
நீலம்பாரித்து பாதரசமிழந்த
விழித்திரையில் பிம்பமாய்

எப்போதோ கேட்டு மகிழ்ந்தது
தேய்ந்து சுரங்கெட்ட
செவியில் திகிரியாய்

என்றும் உணர்ந்து சுகித்தது
திகட்டி இராசயனமறந்த
தசையில் தீண்டலாய்

எவரோ ஊட்டி களித்தது
சுவைகெட்டு சாத்வீகமில்லா
நாவரும்பில் காளானாய்

எக்காலமும் நுகர்ந்து முகிழ்த்தது
வியர்வையுறைந்து நாற்றமுணரா
மூக்கில் முக்தியாய்

ஆற்றல் தருவதே இயந்திரம்
இயந்திரங்களா தீர்வு
பயனில்லா யந்திரத்திற்கு


வருவதைதான் முடிவு செய்யவில்லை
கருணை வையுங்கள் தயவுடன்
தருக்குடன் போவதையாவது

Tuesday, February 08, 2005

ஓட்டமும் சில உண்மைகளும்

நீர்த்துவாலையாய் அணுக்கள்
ஓடையைப் போல் துவங்கும்
வாழ்க்கையின் ஓட்டம்

எதிர்கால ஏக்கங்கள்
எதுவும் தெரியாமல்
நீர்க்குடத்தில் நிம்மதியாய்

உண்ண உணவு
உறைய இடம்
உடுப்பதை உதறி

அருவியாய் வேகம்பிடித்து
தலைகீழ் பயணம்
அந்தோ கொடியறுந்தது

மலைகளைப் போல்
வேகம் தாங்கும்
அன்னையின் நேசம்

ஆர்ப்பரித்து அடங்கி
அகண்ட காவிரியாய்
நிதானமாய் சிலநேரம்

முடிவு தெரிந்தாலும்
கரிப்பு இலக்கினை
மறக்கச் செய்த துணையாறு

போகின்ற போக்கில்
முளை விட்டுப் போன
சில கிளையாறுகள்

இறுதியை எய்ய
சாக்கடை நோய்கள்
சங்கமித்து உதவும்

பள்ளத்தை நோக்கியே
பாய்ந்து விட்டோமா
குறுகுறுக்கும் மனம்

நதியாவது பரவாயில்லை
அணையால் அவ்வப்போது
வந்த பாதை திரும்பிப் பார்க்கும்

மனித ஓட்டத்தை மறிப்பதென்ன?
பிரிவென்பதும் அணைதான்
வாழ்வின் துலாக்கோலாய்

Thursday, January 27, 2005

காட்சிப் பிழைகள்

தட்ஸ்தமிழ்.காம் தளத்தில் வெளியான சிறுகதை

(சுனாமிக்கு முன்னாள் எழுதியது)

காலை நான்கு மணிக்கு ஏர்போர்ட் சவாரி ஆரம்பித்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. எங்காவது ஓரமாக ஒதுங்கி டீ குடிக்கலாமென்றாலும் முடியவில்லை. எப்போதோ பிய்த்துப் போட்ட இட்லி சீரணமாகி வயிறு கரபுரவென்று சத்தம் போட ஆரம்பித்தது.

இன்று யார் முகத்தில் முழித்தேன்? ஓய்வின்றி சவாரிகள்தான். பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு முதிய தம்பதியை இறக்கி விட்டவுடன், இன்றைக்கு இதுவே கடைசி சவாரியென்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன்.
ஆனாலும் லட்சுமி தேவி என்னை விடுவதாகத் தெரியவில்லை. ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் கைகாட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்கள். அவர்களது சைகை ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தோன்றியது. நிறுத்துவது போல் வேகம் பிடிக்கும் பல்லவனைப் போல தப்பிக்க மனம் சொன்னாலும், முடியாமல் ஆட்டோவை நிறுத்தினேன்.

"மெரினா பீச் போகணும்", வாலிபன்தான் பேசினான்.

அடச்சே இதுதான் அவசரமா? ஏன் பஸ்ஸ¤ல போகக்கூடாதா?

"மீட்டர் சார்ஜ்தான். பரவாயில்லையா?", வேண்டா வெறுப்பாய்ச் சொன்னேன். சென்னைவாசிகள் பெரும்பாலும் 'பேசிக்கலாம்ப்பா' என்றுதான் சொல்வார்கள்.
அப்படிச் சொன்னால் ஜீட் விடலாமென்று நினைத்தேன்.

"பரவாயில்லை. போகலாம்." வாலிபனின் பதில் ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஆட்டோவினுள் ஏறிக் கொண்டார்கள்.

சென்னையில் கொஞ்சம் காசு அதிகமாக உள்ளவர்கள் இப்போதெல்லாம் கால் டாக்ஸியைத்தான் கூப்பிடுகின்றார்கள். என்னைப் போல் சூடு வைக்காமல் நியாயமாய் ஆட்டோ ஓட்டுபவர்களையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார்கள். மதுரையில் பட்டப் படிப்பு படித்து, சென்னையில் வேலை கிடைக்காமல் அலையும்போது, நந்தாலால் சேட்டின் புத்திமதி மற்றும் கருணையோடு இப்போது ஆட்டோ ஓட்டுகின்றேன். நேர்மையால் நன்மை கிட்டாமல் இல்லை. ஷேர்டு வேனில் இடம் கிடைக்காதோர், பள்ளிக் குழந்தைகளென்று ரெகுலர் சவாரி கிடைப்பதால் கையைக் கடிக்காமல் நாள் ஓடுகின்றது.

உள்ளூர ஓடிய சிந்தனைகளை பின்சீட்டில் நடந்த உரையாடல் கலைத்தது. ஓட்டும்போது பொதுவாக ஒட்டுகேட்கும் வழக்கம் எனக்கில்லை. யாராவது வலிய பேச்சுக் கொடுத்தாலொழிய பதில் பேசாமல் பெரும்பாலும் போக்குவரத்திலேயே என் கவனம் இருக்கும். இருப்பினும் ஆரம்பத்தில் முணுமுணுப்பாய் பேசியவர்கள் நடு நடுவே உரத்தும் பேச ஆரம்பித்தார்கள். என்னையும் மீறி அந்த ஜோடியின் உரையாடலில் ஆர்வம் கூடியது.
ரியர் வியூ கண்ணாடியை லேசாக நகர்த்தி அவர்களை மேலோட்டமாக நோட்டமிட்டேன். அவர்களோ தமது பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள். வழக்கமாக மெரீனா செல்லும் ஜோடிகள் போலின்றி அவர்கள் இருவரும் நெருங்கி கைகோர்த்து அமர்ந்திருக்கவில்லை. இந்தப் பெண்ணோ தன் கைகளை முன்னே கோர்த்து, தலையைக் கவிழ்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். இளைஞனோ சற்றே அவள் பக்கம் திரும்பி கிசுகிசுப்பாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"... ஒரு வழியாய் நிச்சயம் முடிஞ்சாச்சு...", பெண் கூறினாள்.

"... இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நானும் நம்பலே பிரியா..."

எப்படித்தான் அவர்கள் பேச்சில் மூழ்கினேனோ தெரியாது. ஓவர்டேக் செய்ய முயன்ற வெள்ளை அம்பாசடரை சைடு கொடுக்காமல் ஏறத்தாழ இடித்திருப்பேன்.

"ஏய்... கஸ்மாலம் ரோட்டைப் பாத்து ஓட்டுமே", அம்பாசடர் டிரைவர் தலையை நீட்டி திட்டியதும் அவமானமாயிருந்தது. ஜோடி கேட்டிருக்குமோவென மீண்டும் கண்ணாடியை நோக்கினேன். இச்சம்பவத்தில் பின்சீட்டுக்காரர்கள் அதிக அக்கறை காட்டியது மாதிரி தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்.

மாலை வேளையானதால் வெளியே போக்குவரத்து அதிகமாகிவிட்டிருந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் விட்டால் ஆட்டோ உள்ளேயே வந்து விடுவார்கள் போல் உரசியபடி சென்றார்கள்.

"பத்திரிக்கையெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?"

"ஆமாம் செல்வா."

"கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட தனியா பேசவே முடியாதோன்னு நினைச்சேன்"

"இனிமே இப்படி சந்திக்க முடியுமென்று எனக்கும் தோணல"

இப்போது அவர்களது பேச்சின் உள்ளர்த்தம் ஓரளவு புரிய ஆரம்பித்தது. 'அடப் பாவிங்களா... என்ன பட்டணம் வாழ்வுடா இது? நிச்சயமான பொண்ண எவனோ ஒருத்தன் பீச்சுக்குத் தள்ளிட்டுப் போறான். இந்தப் பொம்பளையும் கூடப் போகுதே?'

உள்ளுணர்வு நமக்கெதுக்கு வம்புபென்று எச்சரித்தது. கடைசி சவாரி இப்படியா முடியவேண்டும்? எரிச்சல் படர்ந்தது.

ஒருவழியாய் பீச் வந்தாயிற்று. ஒழியுங்கள் சனியன்களா என்று மனதில் சபித்தபடி மீட்டர் காசு வாங்கினேன்.

"இந்தாப்பா...இதை வச்சுக்க", என்று மேலும் ஐந்து ரூபாயை என் கையில் திணித்தான். மனக்குரங்கை அதற்கு மேல் அடக்க முடியவில்லை.

"மீட்டருக்கு மேல வேண்டாம் சார். நிச்சயமான ஒரு பொண்ணை இப்படி தள்ளிக்கிட்டு வந்திருக்கீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஏம்மா இது உன்னோட வாழ்க்கைப் பிரச்சினை இல்லே? உனக்கெதுக்குடா இதெல்லாம்...பொத்திக்கிட்டு போன்னு வேணாலும் சொல்லுங்க. சீய் இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்றபடி ஆட்டோவினுள் நுழையும் போது இளைஞனின் குரல் தடுத்தது.

"நீங்க எங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போலிருக்கு. நாங்கதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவசர அவசரமா நிச்சயம் நடந்ததால எங்களுக்குள்ள பேசிக்க அதிக நேரமில்லை. அதான் கல்யாணத்துக்கு முன்னாடி பீச்சுல சந்திக்கலாம்னு முடிவு செஞ்சோம். வர பதினைஞ்சு வடபழனியில எங்க கல்யாணம். முடிஞ்சா நீங்க கண்டிப்பா வரணும்."

செருப்பாலடித்த மாதிரியிருந்தது. "மன்னிச்சுக்குங்க சார். அம்மா நீங்களும் தான். தப்பா புரிஞ்சுக்கிட்டேன்", திக்கித் திணறி பேசி, திரும்பிப் பார்க்காமல் ஆட்டோவைக் கிளப்பி அவசரமாய் இடத்தைக் காலி பண்ணினேன்.

பீச்சில் இளஞ்சூட்டு மணலை கிளறியபடி செல்வா பேசினான், "இனிமே உங்க அப்பாவிடம் பேசி புண்ணியமில்லை. வர்ற பதினைஞ்சாம் தேதி காலை பத்து மணிக்கு பிரண்ட்ஸோட வடபழனி வந்துடறேன். நீயும் கரெக்டா வந்துடு. தாலி கட்டிய கையோட ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம். ஏற்கெனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இதுதான் நம்ம காதல் பிழைக்க ஒரே வழி. சரியா பிரியா?"

Wednesday, January 26, 2005

நினைக்க மறந்தவை

வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது
பாலைவனத்தில் மழை அறியாதது
அமெரிக்க பாலைவனத்தில் மழை
புஷ் வெற்றியாலென ஆத்திக அமெரிக்கர் களிக்கவில்லை

காகிதக் கப்பல் செய்ய நேரமெனக்கில்லை
என் பிள்ளையும் கவலையுறவில்லை
வேர் மறந்த செடியோ?
கேள்வியும் எழவில்லை

அரையிருட்டில் மனைவியின் குரல்
நாட்குறிப்பு மூளையிலோடியது
புணர்ச்சிக்கான நாளில்லையிது
எரிச்சலுடன் எழும்பினேன்

'பேடியோ' ஆன முன்னாள் திண்ணையில்
இருளின் நிறத்தில் பூனை
குப்பைப் பைகளின் கதகதப்பில்
சுருட்டிய டாலராய்

மழைத்துளிகள் மேனியில் மினுத்தது
பூனையும் என்னைப் போலவே எரிச்சலில்
ஏனெழுப்பினாய் என்று

இயலாமையில் என்னைப்போலவே
ஆனால் மௌனம் தொலைத்த அதன்
ஈனஸ்வர அழுகை

சகுனம் பார்க்கும்
மனைவியின் மனதிலும் ஈரமுண்டானது
ஓ... மழையின் மகிமையோ?

ஒரு காலத்தில் செல்லமாய் வாழ்ந்திருக்க வேண்டும்
கொழுப்பில்லா பாலை திருப்தியாய் நக்கியது
தினமும் அண்டுமோவென்ற கவலையெனக்கு

கிரீன் கார்டும், அடுத்த ஒப்பந்த வேலையும்
மனதை ஆட்கொள்ள மறந்தேபோனேன்
விதவையாய் காப்பகத்தில் இட்ட அம்மாவை

Friday, January 21, 2005

வலைப்பூ நண்பர்களுக்கு

ஞாநியைப் பற்றிய எனது இரண்டு பதிவுகளை ரோஸாவஸந்த் என்பவர் பாராட்டி பின்னூட்டங்கள் இட்டிருந்தார். பின்னர் அப்பின்னூட்டங்களை நீக்கும்படி தனியஞ்சலில் கடிதம் எழுதியிருந்தார். பின்னூட்டம் இடுவதும், அதை நீக்கும்படி கோருவதும் அவரது தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட நான் விரும்பவில்லை.

எனது பதிவுகளில் அவரது பின்னூட்டங்கள் தானாக நீக்கப்பட்டிருந்தது. யார் நீக்கினார்கள்? எவ்வாறு நீக்கினார்கள் என்று இன்றும் விளங்கவில்லை. பின்னூட்டம் விட்டவரே அழிக்க முடியுமா? பிளாக்கரின் தொழில்நுட்பம் விளங்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக கோபமாக அவர் இன்னொரு பின்னூட்டமும் விட்டிருக்கின்றார். அவரது கோபம் படிப்பவர்க்கு ஏதோ நானே அவரது பின்னூட்டங்களை நீக்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தலாம். ஆனால் நான் அவரது பின்னூட்டங்களை நீக்கவில்லை.

அவரது வேண்டுகோளின் பெயரில் நானே நீக்க நினைத்திருந்தேன். வலைப்பூ என்பது எனது வாசஸ்தலம். அங்கே புழங்குவது எனது உரிமை. அதை விமர்சனம் செய்ய யாவர்க்கும் உரிமை உண்டு. ஆனால் தானே விமர்சனம் செய்து, பின்னர் பின்னூட்டத்தை அழிக்கும் உரிமையும் அவர்க்கே உண்டென்பது ஆபத்தானது.

பின்னூட்டத்தைப் போலவே நாளை நமது வலைப்பதிவுகளையும் 'ஹேக்' செய்யமுடிமோ?

Friday, January 14, 2005

ஞான சூன்யத்தின் பார்வைகள்

வெ.சா. மற்றும் ஞாநி அவர்களின் கடிதங்கள் 6/1/05 திண்ணை பதிவில் படித்தவுடன் விவரிக்க இயலாத வியப்புக்கு உள்ளானேன். கருத்து சுதந்திரம் என்ற பதமே அர்த்தம் இழந்து சைபர் மற்றும் அவதூறு சட்டங்களின் கட்டமைப்பில் சங்கடங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றதோ என்ற ஐயப்பாடே எனக்குள் மேலோங்குகின்றது.

நாணயத்தின் இருபக்கங்கள் போல எக்கருத்திற்கும் எதிர்வினையுண்டு. ஞானி சொல்வது போல் 'பொது நாகரீகத்திற்கு' உட்பட்டு தாம் வேண்டும் எதிர்வினையைப் பதிய யாவர்க்கும் உரிமையுண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த நாகரீகத்தின் வரையறை யாது? நாகரிகம் என்பதே ஒப்புநோக்குவதன்றோ? நிர்வாண உலகில் கோவணம் கட்டியிருப்பது நாகரீகம் என்பது ஒவ்வாமைதானே? ஆப்கானிஸ்தான் ஆடையலங்காரத்தை 'ஆர்மானி' கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா?

முதலில் திரு. ஞாநி அவர்களின் கடிதத்தைப் பார்ப்போம். 'ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை' என்று மாயவரத்தான் அவர்கள் திண்ணையில் கடிதம் வெளியிட்டார். அதற்கு பதில் சொல்லியிருக்கும் ஞானி அவர்கள், திண்ணை மின்னிதழும், மாயவரத்தானும் 'பகிரங்க மன்னிப்பு' கேட்க வேண்டுமென 'அன்புடன்' மிரட்டியிருக்கின்றார். இங்கு நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் இருவரது கருத்துகளையும் சீர் நோக்கிப் பார்ப்போம்.

மாயவரத்தான் தனது கடிதத்தில் ஞாநியின் 'பார்ப்பனீய எதிர்ப்பை' அவரது 'இயலாமையே' காரணமென்று இடித்துரைத்திருந்தார். ஞானி போன்ற இலக்கியவாதிகளின் இயலாமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாரப்பத்திரிக்கைக்கு மூடுவிழா நடந்ததையும் குறிப்பிட்டு எழுதினார்.

அதற்கு ஞாநியிடமிருந்து வந்த பதில் அணுகுண்டு அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. முதலில் நான் சொல்ல விரும்புவது மாயவரத்தான் என்ற 'போர்வையில்' யாருமில்லை. அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். அவரது பெயர் கி.ரமேஷ்குமார். அவரது ரூபக்குறிப்பை இந்த வலைப்பூ சுட்டியில் காணலாம். ஏறத்தாழ ஞாநியின் பத்திரிக்கை அனுபவ காலத்தை தனது வயதாக கொண்டிருக்கும் மாயவரத்தான் தனது கண்ணோட்டத்தில் ஞாநியை கண்டனம் செய்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக 'சைபர் மற்றும் அவதூறு சட்டங்களை' பாய்ச்சுவேன் என்று சீறுகின்றார் ஞாநி. எனக்குத் தெரிந்த வகையில் தேர்ந்த கடைநிலை அரசியல்வாதியின் நிலைப்பாடுதான் இது. எதிர்வினையை எதிரி வினையாய் பாவிப்பதுதான் அவரது முப்பதாண்டுகால பத்திரிக்கை அனுபவமா? பத்திரிக்கை சுதந்திரத்தை கடைச்சரக்காய் பயன்படுத்தும் ஜெ'யின் புகழ் பாடும் ஞாநியின் உள்மனது புரிகின்றது.

ஜூனியர் போஸ்ட் வார இதழின் ஆசிரியராய் 30 ஆயிரம் பிரதிகளை 80 ஆயிரம் பிரதிகளாய் விற்பனையை உயர்த்தியதாய் ஞாநி தெரிவிக்கின்றார். அவரது திட்ட மேலாண்மை திறனுக்கு வாழ்த்து தெரிவிப்போம். அதே சமயம் சட்டங்களைப் பாய்ச்சுவேன் என்னும் அவரது உயர்மனப்பிறள்விற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.

இதற்கு பதிலாக மாயவரத்தானும், திண்ணையும் மன்னிப்பு கேட்ட கடிதங்களை ஞாநி படித்தாராவெனத் தெரியவில்லை. வெ.சா. கடிதம் போலவே பகடிக்கு சிறிதும் குறை வைக்காமல் அவர்களது பதில் கடிதங்கள் இருக்கின்றன. ஞாநியின் புகழுக்கு ஏற்பட்ட இழுக்கு களையப்பட்டதில் எமக்கும் மகிழ்ச்சியே!

'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று எம்ஜியார் போல பாடத் தோன்றுகின்றது. ஞாநியின் 'சபாஷ் ஜெ' கட்டுரைக்கு எனது எதிர் வினையை that's Tamil.com வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். என்மீது சைபர் சட்டத்தை ஞாநி இன்னும் பாய்ச்சவில்லை.

இம்மாதிரி அரை வேக்காட்டு கட்டு-உரைகளுக்கு எதிர்வினை எழுதி எனது நேரத்தையும், படிக்கும் வாசகர் நேரத்தையும் வீணாக்கியமைக்காக...

ஞாநி அவர்களே இந்த ஞான சூனியத்தை மன்னியுங்கள்!!!

கைமாறு

ஊழித் தாண்டவமது
உதவிக்கரம் நீட்ட பேராசைதான்

கிழிந்த ஆடை
சூட்டை மறந்த அடுப்பு
நசுங்கல் ஏனங்கள்
எலும்பு துருத்திய பிள்ளைகள்
இயலாமையின் சின்னங்களாய் இளித்தன

இரத்தமிழக்கும் பேனாவில்
நைந்து போன சாணித்தாளில் பிறந்தது
கடவுளைக் கண்டிக்கும் கவிதை

உலர்ந்த நாவில்
எஞ்சிய எச்சிலில்
கடனுக்கு ஸ்டாம்பு வாங்கி
வாரநாவலுக்கு அனுப்பியபோது
ஏளனமாய்ப் பார்த்தாள் மனைவி

அருமையான பதிவென்று
கடிதமுடன் காசோலை

சுநாமி நிவாரணத்துக்கு
பணம் கொடுத்து
இயலாமையை இகழ்ந்தேன்

கவிதைக்கு கண்டன கடிதங்கள்
அடுத்த இதழில் வந்ததை
காசு கொடுத்து படிக்க முடியவில்லை