Sunday, April 10, 2005

ஆடிப் பிம்பங்கள்

இடவலமாய்ப் பிரித்துப் போட்டாலும்
உயர்வுமனப் பிறள்வு உடைந்த நேரம்
பாதரசப் பூச்சு பல்லிளித்தாலும்
பிம்பத்தில் முதல் திடுக்கிடல்

கனவுக்கும் நனவிற்கும் நடுவே
கட்டமைத்த பிம்பமா இது?
முக அளவிலேயே முற்றும் போடத் தோன்றியது
ஆளுயரத்திற்கு அவசியமில்லை

அகத்தின் அழகினை முகப்பூச்சால் மெருகேற்றி
அயலானை அங்கலாய்க்க வைத்து
வாழ்க்கையில் ஏமாந்தது யார்?
ஏமாற்றியது யார்?

நரையென்பது நிறையா குறையா?
இறுக்கம் தளர்ந்த தசைநார்கள் சிரிக்கின்றன
காய்ந்த சருகொன்று காற்றினில் உதிர
ஆடிப்பிம்பமொன்று உடைந்து போனது
சிதறிய ஒவ்வொரு சில்லிலும்
தொலைத்த வாழ்க்கையின் பிம்பம்