Sunday, February 27, 2005

இயந்திர நட்டங்கள்

எங்கேயோ பார்த்து ரசித்தது
நீலம்பாரித்து பாதரசமிழந்த
விழித்திரையில் பிம்பமாய்

எப்போதோ கேட்டு மகிழ்ந்தது
தேய்ந்து சுரங்கெட்ட
செவியில் திகிரியாய்

என்றும் உணர்ந்து சுகித்தது
திகட்டி இராசயனமறந்த
தசையில் தீண்டலாய்

எவரோ ஊட்டி களித்தது
சுவைகெட்டு சாத்வீகமில்லா
நாவரும்பில் காளானாய்

எக்காலமும் நுகர்ந்து முகிழ்த்தது
வியர்வையுறைந்து நாற்றமுணரா
மூக்கில் முக்தியாய்

ஆற்றல் தருவதே இயந்திரம்
இயந்திரங்களா தீர்வு
பயனில்லா யந்திரத்திற்கு


வருவதைதான் முடிவு செய்யவில்லை
கருணை வையுங்கள் தயவுடன்
தருக்குடன் போவதையாவது

Tuesday, February 08, 2005

ஓட்டமும் சில உண்மைகளும்

நீர்த்துவாலையாய் அணுக்கள்
ஓடையைப் போல் துவங்கும்
வாழ்க்கையின் ஓட்டம்

எதிர்கால ஏக்கங்கள்
எதுவும் தெரியாமல்
நீர்க்குடத்தில் நிம்மதியாய்

உண்ண உணவு
உறைய இடம்
உடுப்பதை உதறி

அருவியாய் வேகம்பிடித்து
தலைகீழ் பயணம்
அந்தோ கொடியறுந்தது

மலைகளைப் போல்
வேகம் தாங்கும்
அன்னையின் நேசம்

ஆர்ப்பரித்து அடங்கி
அகண்ட காவிரியாய்
நிதானமாய் சிலநேரம்

முடிவு தெரிந்தாலும்
கரிப்பு இலக்கினை
மறக்கச் செய்த துணையாறு

போகின்ற போக்கில்
முளை விட்டுப் போன
சில கிளையாறுகள்

இறுதியை எய்ய
சாக்கடை நோய்கள்
சங்கமித்து உதவும்

பள்ளத்தை நோக்கியே
பாய்ந்து விட்டோமா
குறுகுறுக்கும் மனம்

நதியாவது பரவாயில்லை
அணையால் அவ்வப்போது
வந்த பாதை திரும்பிப் பார்க்கும்

மனித ஓட்டத்தை மறிப்பதென்ன?
பிரிவென்பதும் அணைதான்
வாழ்வின் துலாக்கோலாய்