Tuesday, July 27, 2004

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

பில்லியன் மக்களின் கனவு நாயகன். உலகில் மற்ற எந்த ஜாம்பவானாலும் நினைத்துப் பார்க்க முடியாத பேரையும், புகழையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்றவர். தனது "கனத்தை" ஆட்டக் களத்தில் மட்டுமே காட்டும் அதிசய மனிதர். இவரைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
Sachinchild 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத கிரிக்கெட் அணியின் பாரம் தூக்கியாய், அனைவரையும் அனுசரித்து அணிக்காக ஆடுபவராய் இருப்பவர் மீது காழ்ப்புணர்வின் காரணமாய் விமர்சன அம்புகள் விழுந்த வண்ணம் இருக்கும்.

கடைசியாக விழுந்த கணை: ஆட்டத்தில் அழகுணர்ச்சி இல்லையாம். ஆமாம்...அழகு என்பது பார்ப்பவர் கண்ணோட்டத்தில் அல்லவே இருக்கிறது. காமாலைக் கண்கள் காண்பதெல்லாம் மஞ்சள் தானே?

பத்ரி தமிழோவியத்தில் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அவரும் டெண்டுல்கரின் ஆட்டத்தில் அழகு குறைந்ததாகவே கருதுகிறார். எனக்கு அக்கருத்தில் முழு உடன்பாடு இல்லை.

ஆரம்ப காலத்தில் அதிரடியாக ஓட்டங்கள் குவித்த போது, பொறுப்பின்றி ஆடி விக்கெட்டைத் தானம் செய்கிறார் என்றார்கள். கடைசிவரை நின்று ஆடினால் அவரால் இந்தியாவிற்கு இன்னும் வெற்றிகளைப் பெற்றுத் தர முடியுமென ஆருடம் கூறினார்கள். இன்று நளினத்தைக் கூட்டி, வேகம் குறைத்து விவேகத்துடன் ஆடும் போது அழகு போய்விட்டதாய் புலம்புகிறார்கள். பழமரம் கல்லடி படத்தானே செய்யும்?   
tendulkarloftaus
கிரிக்கெட் விளையாட்டின் பலமும், பலவீனமும் என்ன தெரியுமா? தாம்பூலக் கடையிலிருந்து, டாஸ்மாக் பார் வரை அக்குவேறு ஆணிவேறாக அனைவராலும் அலசப்படுவதுதான். தென்னை மட்டையில், கோல்ப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் ஆடத் தொடங்கிய நான் இன்று விமர்சனக் கட்டுரை எழுதவில்லையா?

பொங்கி வரும் புது வெள்ளமாய், விதிகளின்றி எழுதப்பட்ட புதுக்கவிதையாயிருந்த டெண்டுல்கர், இன்று அகண்ட நதியாய், விதிகளோடு எழுதப்படும் வெண்பாவாய் விளங்குகிறார். வெள்ளத்தை ரசித்தவர்கள் ஆழ்ந்த நதியின் அழகை ஏன் இனம் காண முடியவில்லை? புதுக்கவிதைக்கு ஆதரவு தர வெண்பாவை ஏன் வெறுக்க வேண்டும்?

டெண்டில்யா ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். கடவுளில்லை. அவர் தனது பலவீனங்களை அடையாளம் கண்டு உடனே அரண் அமைப்பதில் கில்லாடி. வயதாகும் போது கணிக்கும் திறன் (Timing), அணுகுமுறை (Approach) போன்றவற்றை சற்றே திருத்தி அமைத்தார். மேலும் அதிரடியாக ஆடுவதற்கு ஜெராக்ஸ் டெண்டுல்கராய் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக்கும், மத்திய வரிசையில் இளம் யுவராஜ் சிங் மற்றும் முகமது கேய்ப்'ம் இருக்கும் போது டெண்டுல்கர் நிதானமாய் ஆடுவதுதான் நல்லது. இரட்டைக் குழல் துப்பாக்கியாய் கடந்த பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை மோதல் போல தேவைப்பட்டால் மட்டும் வெடிக்கலாம்.

நடந்து முடிந்த பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளரான ஓமர் குல் சொன்னது, "சச்சினுக்கு Incoming Seaming Delivery'யை ஆட தொடக்கத்தில் தயங்குவார். இது ஒரு பலவீனம்". இதே பழைய டெண்டுல்கராக இருந்தால் Leg Glance/ Nice Flick / Short Arm Pull / Lofted Staraight Drive ஏன் Inside Out கூட ஆடத் தயங்கியிருக்க மாட்டார். தற்காப்பு முறையில் (அதே பந்தை) தடுப்பாட்டத்தையே சிறிது முரட்டுத்தனம் கலந்து ஆடி, ஒரு ரன் எடுக்க முயல்வது தவறா?   
sachin pull
பிஷன்சிங் பேடி தன்னிடம் கூறியதாக நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, "சச்சினை "Caught & Bowled" முறையில் அவுட் ஆக்க வேண்டும்" என்றார். எப்படி பந்தி வீசி என்று தெரிவிக்கவில்லை. ஆனால் இது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். C&B முறையில் இதுவரை மொத்தம் 45 முறை அவுட்டாகி உள்ளார். (போல்டு: 47, காட்ச் 148, 24 LBW, 8 Stumped, 25Runout : மொத்தம் 297 அவுட்)

மொத்தத்தில் டெண்டுல்கரின் பலவீனங்களைப் பட்டியலிட்டால்:
1. கால்களின் கிரமமாக சேர்த்தல் (Leg Co-ordination) புத்தக விதிப்படி தற்போது இல்லை. அதனால் பேட்டிற்கும், பேடிற்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் "Sharp off-cutter" போன்று விரைவான உள்நோக்கித் திரும்பும் பந்துகளை வீசினால் கிளீன் போல்ட் மற்றும் "Played On"ஆகும் வாய்ப்பு அதிகம்.

2. தடுத்தாடும் போது அடிக்கைக்கு அதிக அழுத்தம் கொடுத்து மட்டையை பிட்ச் நோக்கிச் சிறிதாய் தாழ வைத்து விளையாடாமல், சற்றே மேல் நோக்கி ஆடுவது. இதனால் மெதுவாக வரும் பந்துகளை (ஸ்பின்னானலும், வேகப்பந்து வீச்சாளர்கள் தந்திரமாய் வீசும் ஸ்லோ பந்தானாலும்), சிறிதே நேரம் பிசகினாலும் பந்து கெந்தப்பட்டு (Ballooning) "V" பகுதியில் கேட்ச் ஆகும் வாய்ப்பு அதிகம். முதன் முதலில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் (முக்கியமாக De Villiers, Petrus S) திறமையாக இப்பலவீனத்தை பயன்படுத்தினார்கள்.

3. கூட ஆடுபவர் "strike rotation" செய்யாவிட்டால், பொறுமை இழப்பது.

4. அனைத்து மட்டையாளர்களுக்கும் இருப்பதை போலவே தொடக்க ஓவர்களில் ஆப் ஸ்டம்ப்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை ஸ்லிப்கள் தாண்டி "ஒத்தியாட" முனைவது. இது ஒரு நாள் போட்டியால் விளைந்த சாபக்கேடு. ராகுல் திரவிடையும் இது விட்டு வைக்கவில்லை.

அவர் குவித்த ஓட்டங்களும், சராசரி ஓட்டங்களும், ஓட்ட வேகமும் அவர் தனது தவறுகளை உணர்ந்து, ஆடும் போக்கை திருத்தி அமைத்துக் கொண்டதாகவே படுகிறது. அவரது கூற்றுப்படி தினமும் புதிதாக ஒன்றை அறிந்து, தன்னை மெருகேற்றிக் கொள்வது தெளிவாகப் புரியும்.
புள்ளி விவரம் வேண்டுவோர்க்கு, கடந்த 5 வருடக் கணிதம் பார்ப்போமா?

மட்டை பிடித்தல்
வருடம்  M  Inns  NO  50s  100s  HS  Runs  Avg     Ca  
2000          34  34     0      6         3     146  1328 39.06  11  
2001           17  16     3      3         4      146  904  69.54   3  
2002          20  19     5      3         2      113  741   52.93   4  
2003          21  21     1       8         3      152  1141 57.05   4  
2004          17  17     1       4         1       141  656  41.00   4  

பந்து வீசுதல்

வருடம்  O   M  R      W  4w  Best  Avg     S/R     E/R
2000        170   2  835  20  1    4/56  41.75  51.00  4.91
2001         43    1  230   5    0    3/35  46.00 51.60  5.35
2002         66.5 0  363  7    0    2/41  51.86  57.29  5.43
2003         39    0  202  3    0    2/28  67.33  78.00  5.18
2004         60    1  352  13   0    3/21  27.08  27.69  5.87

7/6/75'ல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சுனில் கவாஸ்கர் 174 பந்துகளைச் சந்தித்து 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 31/10/87'ல் புருடன்ஷியல் கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 88 பந்துகளில் தனது ஒரே சதத்தை (103 ஆட்டம் இழக்காமல்) அடிக்கவில்லையா? அன்று ஈவான் சாட்பீல்டிற்கு தூக்கமே வந்திருக்காது. ஏனென்றால் எதிரே ஆடும் அதிரடி சிரீகாந்த்திற்கு முன் அரை சதம் அடித்தார் கவாஸ்கர். இன்று நளினத்தின் பெயரில் அவ்வளவு மெதுவாகவா டெண்டுல்கர் விளையாடுகிறார்? என்ன ரன் குவிக்கும் வேகம் 100'க்கு மேலிருந்து 80'பதுகளுக்கு இறங்கி வந்து விட்டது.   

அழகு போய்விட்டது (நளினம் கூடினாலும்), பெராரி கார் (ஒழுங்காக வருமான வரி கட்டினாலும்), அதிகம் பேச ஆரம்பித்து விட்டார் (பேசாவிடில் மண்டைக்கனம் என்பார்கள்), ஆட்டத்தின் மீது நாட்டம் குறைந்து விட்டது (50 முறை ஆட்ட நாயகனாகி சாதனை புரிந்தாலும்) இன்னும் பல புரட்டு பேசுவார்கள். அதையெல்லாம் பொய்யாக்கி தனக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயத்தில் க(வ)னம் செலுத்துவார் டெண்டுல்கர். அது தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடுவது. 

எனக்கிருக்கும் ஒரே ஒரு ஆதங்கம். அணித்தலைவராய் இரண்டு முறை வந்தாலும் சோபிக்க முடியவில்லையே என்று. இது செய்வினையா, செய்யா வினையா, ஊழ் வினையா, ஊழல் வினையா?



Monday, July 26, 2004

இலட்சியம்

முதலே
தெரியாதபோது
எதற்கும்
முடிவென்பதேது?

மழைத்துளிக்கு
மணல் முடிவு
ஆறுக்கு
கடல் முடிவு
நீருக்கு
எது முடிவு?

பிறப்பு
இறப்பு
உடலுக்கு
ஆன்மாவிற்கு
அழிவேது?

பழையவற்றைப்
பார்க்க
விரும்பவில்லை
நாளையிருப்பதை
நம்பவில்லை
இன்றுவாழ்கிறேன்
இதுநிஜம்

இன்றே
வாழ்ந்துவிடு
இருக்கும்வரை
வாழவிடு!

Sunday, July 25, 2004

எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள்

ஈழத்தில் இந்திய ராணுவக்காலம்

அன்பார்ந்த தோழியர்க்கு,

வதனா அவர்களின் பதிவினைப் படித்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் யாவர்க்கும் பொது. அதன் அடிப்படையில் அவரது படைப்பினை வரவேற்கின்றேன். கூடவே வெளியான கவிதைதான் வேதனையை வெளிப்படுத்துகிறது.

நாட்களின் நகர்வில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் இயலவில்லை
இன்னும்

இக்கவிதையைப் படித்தபின் என்னுள் பல கேள்விகள்.

எங்கேயோ இருக்கும் நார்வே, இலங்கை தேசத்தில் அமைதி ஏற்படுத்த தீவிரமாய் செயல்படுகிறது. முதன் முறை கையைச் சுட்டுக் கொண்டாலும், இந்தியா அமைதிப் பேச்சுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கும் சமயத்தில் இக்கவிதை எனது பலவீனமான பகுதியில் பலமாய் இடித்தது. காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.

ஆமாம். வதனா, உங்களுக்கு இக்கவிதையில் முழு உடன்பாடா? இதுதான் அனைத்து ஈழத்தமிழர்களின் எண்ணவோட்டமா? அப்படியென்றால் உங்கள் தேசத்தில் யார் நெருப்பள்ளிக் கொட்டியது? இந்திய ராணுவமா? உங்கள் வானத்தின் மீது இருளள்ளிப் பூசியது யார்? இந்தியாவா? விடுதலைப் புலிகள் என்றால் அவரும் ஈழத் தமிழரா? இல்லை அவர்கள் வேறா?

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்? தனது 1,200 மகன்களை காவு கொடுத்து 3,000 மகன்களை காயப்படுத்தி இந்தியத் தாய் கண்ட பலன் என்ன? தனது மண்ணிலேயே ஒரு தலைவனை/தனையனை இரத்த சகதியில் அமிழ வைத்தென்ன புண்ணியம்? தடா, பொடா இன்னும் எத்தனை "டா"க்கள் காத்துள்ளன? என்னாலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை, இன்னும்.

உடனே கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்துகிறேனென்று எண்ணாதீர். அது நான் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

நியாயமான பின்னூட்டங்களுக்கும், எதிர் பதிப்புகளுக்கும் கண்டிப்பாய் என் பக்க நியாயத்தை நிலை நிறுத்துவேன்.

வந்தியத்தேவன்.



Saturday, July 24, 2004

Scent of a Woman

21m 

உலகிலேயேகொடிய நோய் எதுவென்று கேட்டால் "தனிமை" என்றுதான் சொல்லுவேன், எப்போதோ படித்த சிறுகதையில், மகன் முதுமைப் பருவத்திலிருந்த தந்தைக்கு அனைத்து வசதிகளையும் அவரது அறையிலேயே செய்து கொடுப்பான். ஆனாலும் தந்தை முகத்தில் சந்தோஷமில்லை. காரணம் அந்த அறையே அவருக்கு சிறையானதுதான். ஹாலில் குடும்பத்துடன் தொலைக்காட்சி காண்பதிலுள்ள சுகம் அம்முதியவர்க்கு தனியே, தன்னறையில் கிட்டவில்லை.

26 வருடங்கள் ஆர்மியில் பணியாற்றி, இயல்பு வாழ்க்கையிலும் கஞ்சி போட்ட விறைப்புடன் வாழ்பவர் கர்னல் பிராங்க் (Lt. Col. Frank Slade). உற்றாரும், சுற்றாரும் ஒதுக்கி விட தனது தனிமையும், ஜாக் டேனியல் விஸ்கியுமாக வாழ்கிறார். பணியிலிருக்கும் போது நடந்த கையெறிகுண்டு விபத்தில் கர்னல் பிராங்க்கின் கண் பார்வை சுத்தமாக போய்விடுகிறது.

ஸ்காலர்ஷிப்பையே நம்பி வாழும் சார்லி, Thanksgiving விடுமுறையிலும் பகுதி நேர வேலை செய்து காசு பார்க்க வேண்டிய கட்டாயம். கர்னல் பிராங்க்கை பார்த்துக் கொண்டால் $300 தருகிறேனென, அவரது மகள் கேட்க, சார்லி சம்மதிக்கிறான்.

கர்னல் பிராங்க் ஒரு அருமையான திட்டம் வைத்திருக்கிறார். சார்லியோடு நியூயார்க் செல்வது. பிஸினஸ் வகுப்பு பயணம், உயர் ரக ஓட்டலில் தங்குவது, அருமையான மது, விலை உயர்ந்த மாது, பின்னர்...45மிமீ கைத்துப்பாக்கியால் மூளை சிதறி சாவது.

ஒரு சாதாரணக் கதைக்கு வலுவூட்டுவது கர்னல் பிராங்க்காகக் தோன்றும் அல் பாசீனோ (Al Pacino). ஹ¤ஹா என்று நீட்டி முழக்குவதும், பெண்களின் வாசனாதி திரவியத்தை தூரத்திலேயே முகர்ந்தறிந்து வளைக்கும் லாவகமும், டாங்கோ நடனமாடுவதும், இறுதிக் காட்சியில் சார்லிக்காக பள்ளியில் வாதாடுவதும் என்று பின்னியெடுத்திருக்கிறார்.

அல் பாசீனோவோடு நடிக்க வேண்டுமென்றால் நிறைய தன்னம்பிக்கை வேண்டும். சார்லியாக வரும் கிறிஸ் ஓ'டோனலிடம் (Chris O'Donnel) அது எக்கச்சக்கமாய் இருக்கிறது. நேர்மையான அப்பாவி இளைஞனாய் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

படத்தில் எனக்கு பிடித்த வசனங்களைத் தமிழ்ப்படுத்தி தர இயலாது. ஆனால் வசனங்களில் விரசம் தெரியவில்லை. மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வே தெரிகிறது.  

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது (1992) அல் பாசீனோவுக்கு கிட்டியது மிகவும் பொருத்தமானது.

புதிய பதிவுகள்

தமிழோவியத்தில் எனது படைப்புகள் வெளியாகி உள்ளன. எட்டிப் பாருங்களேன்.
அம் மெய்யப்பன்: சிறுகதை
பியானோ ஒளிர்வதும் மிளிர்வதும் - 1
பியானோ ஒளிர்வதும் மிளிர்வதும் - 2  

Tuesday, July 20, 2004

ஷியாமளன் VS. Sci Fi சேனல் (Guerilla Marketing Campaign)
 
முதல் பதிவின் பின்னூட்டத்தில் பாஸ்டன் பாலா குறிப்பிட்டது போல இந்த சர்ச்சை புஸ்வாணமாம். 3 மணி நேரம் விரயமானதுதான் மிச்சம். இதற்கு பெயர் "Guerilla Marketing Campaign".

ஒன்று மட்டும் நிச்சயம். பார்வையாளர்களை அதிகப்படுத்த சேனல் நினைத்திருந்தால் வெறுப்பையே அதிகம் சம்பாதித்திருக்குமென்பது என் கருத்து.

The Village படம் ஓடுவதற்காக ஷியாமளனின் ஐடியாவாம் இது. விஜய் விஷம் குடித்தார், நடிகை டைரக்டரோடு நெருங்கிப் பழகுகிறார் என்று படம் வெளியாகு முன்னர் கோலிவுட்டில் கிளப்பப்படும் வதந்திகளுக்கும், இதற்கும் துளியும் வித்தியாசமில்லை.

ஹாலிவுட் போனாலும், புதுச்சேரியில் பிறந்த மனோஜ் நைட் ஷியாமளன் தன் பாரம்பரியம் மறக்கவில்லை. வாழ்க !!!

Sunday, July 18, 2004

பூவுதிர் அவலம்
அக்னி ஆண்டவா
உன்
அகோரப் பசிக்கு
இளம் குருத்துக்களா?

சிறாரை
சிறைவைத்து
பறந்ததோடினராம்
ஆசிரியப் பேடிகள்

கோழையாம்
அவர்தம்மை
தீயே நீ
தின்னிருக்க வேண்டாமா?

சட்டசபை கட்டவும்
அதைத் தடுக்கவும்
கஜானா நிரப்பவுமே
நேரம் போதவில்லை
அரசியல்வாதிகட்கு

இச்சம்பவமினி
மெல்லச் சாகும்
அடுத்த மயானச்செய்தியில்
வரலாறாகும்

நீதி
கேட்போருக்கு
நிதி
கொடுப்பர்

பள்ளிப்
பாதுகாப்புக்கு
புதிய துறை
உருவாகும்

இன்ன பிற
அரசுத் துறைகள் போல
லஞ்ச லாவண்யம்
தலை விரித்தாடும்

உதவிக்கரம் நீட்டி
இறந்துபோன
தொழிலாளிக்கு
சிலை வைக்காதீர்

அவனது
இறுதி ஈரத்தை
மனித நேயம் வளர்க்க
எல்லார் மேலும் தெளியுங்கள்

எட்ட நின்று மாரடிக்கும்
இயலாமை என்னை
மெல்லக் கொல்லும்
சப்தமின்றி
 

சியாமளனின் சர்ச்சை
மனோஜ் நைட் சியாமளன், பிலடெல்ப்பியாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர். The Sixth Sense, Signs திரைப்படங்கள் மூலம் ஹாலிவுட்டை கலக்கி வருபவர். அமானுஷ்ய விஷயங்களை படமாகக் கொடுப்பதில் கில்லாடி. The village என்னும் படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரும் நேரத்தில்தான், Sci Fi என்ற TV சேனலுடன் சர்ச்சை வெடித்திருக்கிறது.
Sci Fi சேனல், சியாமளனைப் பற்றி 3 மணி நேர விவரணப் படமெடுக்க விரும்பியது. சியாமளன் சம்மதம் தெரிவிக்க கடந்த 4 மாத காலமாக அவரின் அந்தரங்க வாழ்க்கை மற்றும் திரைப்படமெடுக்கும் விதம் என்று படமெடுத்தார்கள்.
என்னவானதோ தெரியவில்லை. (மிகவும் அந்தரங்கமாக் கேள்விகள் கேட்கப்பட்டன என்று வதந்தி). சியாமளன் மேலும் ஒத்துழைப்பு தர மறுக்க, வந்தவரை படம் காட்டலாமென Sci Fi முடிவு செய்து விட்டது. The Buried Secret of M. Night Shyamalan, ஞாயிறு 8:00 PM ET ஒளிபரப்பாகிறது. சியாமளனின் பல ரகசியங்களை அவிழ்த்து விடுவோமென சேனல் மார் தட்டுகிறது.
பார்ப்போம்.
சியாமளனைப் பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக்குங்கள்.

Sunday, July 11, 2004

நிழலும் நிதர்சனமும்

சில நல்ல மனிதர்கள் (A Few Good Men)

1992'ல் வெளியான இந்த ஆங்கிலப் படத்தை நேயர்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்கள் எனத் தெரியாது. ராபர்ட் ரைனெர் இயக்கத்தில் டாம் குரூஸ், டெமி மூர் நல்லவர்களாகவும், கீபர் சதர்லேண்ட் மற்றும் ஜேக் நிக்கோல்சன் உச்சபட்ச கெட்டவர்களாகவும் நடித்து பிரமாதப்படுத்திய திரைப்படம் Few Good Men.

fewgoodmen

எனது பதிப்பு திரை விமர்சனம் இல்லை. ஆகவே சுருக்கமாய் முடித்து மேலே செல்வேன். கியூபாவிலுள்ள அதிரடிப்படையின் கமாண்டிங் ஆபீஸர் ஜேக் நிக்கோல்சன். அதிரடிப்படையினர்க்குண்டான கடுமையான கட்டுக்கோப்புக் கொண்டவர். அவரது பிரிவில் ஒரு வீரர் மர்மமமான முறையில் இறக்க, சக வீரர்கள் இருவர் மீது கொலைப்பழி விழ, இராணுவ நீதிமன்றம் (Court Marsall) கூடுகிறது. பழி விழுந்தவர் அப்பாவிகள். உண்மையில் கமாண்டிங் ஆபீஸரின் "Code Red" என்னும் எழுதப்படாத சட்டம் இறந்த வீரர் மேல் வீசப்படுகிறது. Code Red என்பது அதிரடிப்படை வீரர், இயல்பாக செய்யக்கூடிய உடற்கூறு செயல்கள் (Physical activities) செய்ய முடியாவிட்டால் தரப்படும் தண்டனையாகும். சராசரிக்கும் குறைவான திறன் கொண்ட அந்த துர்பாக்கியசாலி உணவு, நீர் மறுக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட, காவலுக்கிகிருந்த அப்பாவி வீரர்கள் அனுதாபப்பட்டு உதவுகின்றனர் (கொஞ்சம் நீர் மற்றும் உணவு தந்து...). இறுதியில் மர்மமான முறையில் Code Red வீரர் இறக்க, பழி காவலாளிகள் மீது விழுகிறது. மயிர்க்கூச்செறியும் வசனங்களுடன் (இராணுவத்தில் இருந்தவர் இன்னும் ரசிக்கலாம்), சிறந்த காட்சியமைப்புடன் நல்லவர், கெட்டவரை (வல்லவராயிருந்தும்) வெற்றி கொள்ளுமாறு படம் முடியும்.

ஒரு சிறிய காட்சி மாற்றம். ரபீந்திர சிங் பதிவில் நான் சொன்னதேதான். கண்களைக் கொஞ்சம் மூடுங்கள்.

எதிரி நாட்டினுள் சண்டைபுரிபவர் நீங்கள். போரின் பரிமாணம் முற்றிலும் மாறுபட்ட தருணம். தற்கொலைப் படை, திடீர் தாக்குதல் (Ambush) நடுவே குடிமக்கள் யார், தீவிரவாதி யார் என அடையாளம் காணும் அவகாசம் மிகக் குறைவு. அதாவது கரணம் தப்பினால் மரணம்.

வெள்ளைக் கொடியாட்டி சரணடையப் போவது போல் இடுப்பில் குண்டு கட்டி கொல்லும் கட்டத்தில், சிறியவர் பெண்கள் கூட தற்கொலைப்பிரிவின் அங்கத்தினராய் இருக்கும் காலத்தில், உங்களை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

எங்கும் கந்தகப் புகை...குண்டுகளின் சப்தம்...இறப்பவரின் ஓலம்...இறந்தவரின் பிண்டங்கள்...மரணத்தின் வாசனை...அட்ரலீன்னின் அதீத சுரப்புகள்...சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்புக் குரல் (போரை எதிர்த்து)...சண்டையிடும் நாட்டின் மக்களும் சலித்துப்போன தருணம்...

நல்லதெனக் கூற கூட ஒன்றுமே இல்லை. ஆனாலும் உங்களை எதுவும் அசைத்து விடாது. முப்படைகளின் தளபதி ஆணை கேட்டு சிலிர்த்த சிங்கங்களாச் சென்றவர் நீங்கள். தளபதி ஒரு அரசியல்வாதி. ஆயினும் மக்களின் பிரதிநிதி. இராணுவத்தில் குடியாட்சிக் கேள்விகள் கேட்க இயலாது. கடமையே கண்ணான வீரரன்றோ நீங்கள்?

உங்களின் உற்ற தோழன் கையிலிருக்கும் ஆயுதங்களும், உயிர் காக்கும் சமாச்சாரங்களுமே...

ஆமாம் என்ன இது? ஒரு உல்லாசப் பயணிபோல் காமிராவும் தெரிகிறதே? அடடே...பரவாயில்லை. இடைப்பட்ட நேரத்தில் முக்கிய தருணங்களை "சிறை" பிடிக்க நினைத்திருப்பீர்கள். தப்பில்லை. ஆனால் சிறையிலேயே சிறை (போட்டோ) பிடிக்க நினைத்தீரோ?

அதுவும் எப்படி? பாலியல் பலாத்காரம், வர்ணனைக்குட்படாத வக்கிர காட்சிகள், மானுடம் அறியாத சித்ரவதை இன்னும் பிற. மனிதனுக்குள் மிருகம் படித்திருக்கிறேன். இருப்பினும் மிருகத்தில் மிருகமாய்...அதுவும் நீங்களா? இதென்ன தேசப்பற்றை 50 ரூபாய் வாசனாதிப் பொருளும், 5 ரூபாய் மல்லிகைப் பூவிலும் காட்டிவிட்டீரே? இத்துனை மலிவாய்?

கணிணியில் கைவிரல் நர்த்தனமிட கண்டபடி உங்களைப் பற்றி எழுதிவிட்டாலும் ஒரு கணம் உங்களோடு ஐக்கியமாகிறேன். "சொல்வதைச் செய்" உங்கள் கொள்கை அல்லவா?

திரைப்படத்தில் ஜேக் நிக்கோல்சன் கூட ஒத்தூதினார். கட்டளையை கடமையாய் நிறைவேற்ற வேண்டுமென்று...மேலும் "வழக்கறிஞராய் (ஏனைய எழுத்தாளர் போல) கேள்வி கேட்பதென்பதெளிது. நீங்கள் நானளிக்கும் சுதந்திரப் போர்வையில் உல்லாசமாய் உறங்குபவர்கள். இப்போர்வையை எப்படி வழங்குகிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள்."

விசிலடிக்கும் வசனங்களில் ஒன்று.

மேலதிகாரி (Superior Officer) சொல்லாமல் ஓரணுவும் அசையாது. உங்களோடு ஒத்துப் போகிறேன். உங்களில் "மனிதப் போர்வையில் மிருகத்தில் மிருகம்" உண்டு. ஆமோதிக்கிறேன். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒன்றா? இடிக்கிறது. இன்று நீங்கள் மட்டும் இராணுவ விசாரணையில்...மேலதிகாரிகளோ?

நீதிக்கு கண்ணுண்டு. பார்வையில்லையோ? எய்தவர் இருக்க அம்பை நோவரோ? தளபதி மற்றும் பல அரசியல்வாதிகள் நீங்கள் தந்த சுதந்திரப் போர்வையில் உல்லாசமாய் இருக்க Few Good Men போலவே இன்று இராணுவ நீதிமன்றத்தில் உங்கள் தோல் உரிக்கப்படுகிறது.

காட்சி மாற்றம். Few Good Men படத்தின் உச்சகாட்சி (கிளைமாக்ஸ்). பழிக்குட்பட்ட வீரர்கள் கொலை மற்றும் கொலைக்கான திட்டமிடல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலையாகின்றனர். ஆனால் இராணுவ விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக "Dismissed with Disgrace" செய்யப்படுகின்றனர்.

மரண தண்டனை எதிர் நோக்கிய பழிதூற்றப்பட்ட வீரர்கள் சந்தோஷக் களியாட்டமாடுவதாய் படம் முடியவில்லை. வீரர்களில் ஒருவன் உரிமைக் கேள்வி கேட்கிறான்.

"Dismissed with Disgrace என்றால் என்ன? மேலதிகாரி சொன்னதைத்தானே செய்தேன்?"
இரண்டாமவன் பதிலளிக்கிறான்,"இறந்தவனின் உரிமையை குறைந்தபட்சம் காப்பாற்ற நாம் போராடியிருக்கவேண்டும்"

இராணுவத்தில் குடியாட்சியா? இராணுவ உடையில் (பதிவு முடியும் வரையில்) இருந்த உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

Few Good Men நிழல். Abu Ghraib scandal நிதர்சனம்.

Tuesday, July 06, 2004

டாலர் தேசம் - விமர்சனம் பகுதி 2

முதல் ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை சுமார் 5,50,000. கூட்டு நாடுகளின் பங்களிப்பு சுமார் 1,60,000. பல உலக நாடுகளின் அங்கீகாரத்துடன் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட போரிது.

இப்போரில் குவைத்திலிருந்து ஈராக்கியரை அப்புறப்படுத்துவதே முதல் நோக்கமாயிருந்தது. ஈராக்கியர் இந்த யுத்ததிலும் வீரமாகப் போரிடவில்லை என்பதே என் கணிப்பு. குவைத்திலிருந்து பாலைவனத்தில் புறமுதுகாட்டி ஓடிய ஈராக்கிய படையினரை துவம்சம் செய்துவிட்டது அமெரிக்காவும் கூட்டுப் படைகளும். ஈராக்கின் சேதாரக் கணக்கு வேண்டுமா? சுமார் 1,00,000 பேர் மரணம்; 3,00,000 காயம்; 1,50,000 பேர் படையை விட்டு ஓட்டம்; 60,000 பேர் சிறைபிடிப்பு. இழந்த ராணுவ தளவாடங்களோ கணக்கிலடங்காதது.

இரண்டாம் ஈராக் யுத்தமோ சதாம் உசேன் மண்ணில் பிரதானமாய் நடந்தது. பிரான்ஸ¤ம், ஜெர்மனியும் இந்தப் போரை வன்மையாய் கண்டித்ததுடன், தனது படைகளையோ, இராணுவ தளவாடங்களையோ அனுப்ப மறுத்து விட்டது. முந்தைய போரில் 18,000 படையினரையும், 60 போர் விமானங்களும் இன்னும் பல கப்பல்கள், டாங்குகளுடன் பிரான்ஸ் களம் புகுந்தது. ஜெர்மனி தன் பங்குக்கு 200 ஆர்மி வீரர்கள், 500 நேவி வீரார்கள், பல போர்விமானங்களுடன் குஸ்தி போட்டது.

மொத்தம் 49 நாடுகள் இரண்டாம் போரை ஆதரிப்பதாய் புஷ் பீற்றிக்கொண்டாலும், நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் சிரிப்புதான் பீறிடும். மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, சாலமன் தீவுகள், டோங்கா இவையெல்லாம் அந்த ஆதரிப்பு லிஸ்டில் அடங்கும்.

இம்முறை அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை சுமார் 3,00,000. இங்கிலாந்து 26,000 பேரையும், ஆஸ்திரேலியா 2,000 பேரையும், கனடா 25 பேரையும், போலந்து 200 பேரையும் அனுப்பி வைத்தது. ஆக படையினர் எண்ணிக்கை மற்றும் படைகலன்கள் கணக்கை ஏறிட்டுப் பார்த்தால் முதல் போரைவிட இரண்டாம் போர் சரி பாதி அல்லது அதற்கும் குறைவெனலாம். எனவே வெறும் எண்ணிக்கையினால் ஈராக் வீரர்கள் பயந்தனர் என்று சொல்ல முடியாது.

முதல் போரில் நேர்ந்த உயிர்ப்பலியாலேற்பட்ட கிலி, சதாம் தலைமறைவு, கடந்த 10 வருடங்களில் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றம் (தகவல் தொடர்பு, ஏவுகணை இன்னும் பல) இவைதான் ஈராக் எளிதாய் வீழ்ந்ததற்கு காரணமெனலாம்.

இவ்விரண்டு போரிலும் ஈராக் ரொம்ப சுலமாகப் அமெரிக்காவால் புரட்டியடிக்கப்பட்டது. கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவைப் புரட்டியது போல. என்ன ஒரு முக்கிய வித்தியாசம் முதல் போரில் சதாம் ஸ்கட் ஏவுகணைகள் வீசினார். இம்முறை செய்யவில்லை. ஒருவேளை உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா தாக்குதல் தொடுக்காது என்ற அல்ப ஆசை வந்ததால் ஸ்கட்டை தயார் செய்து வைக்கவில்லையோ என்னமோ?

Monday, July 05, 2004

டாலர் தேசம் - விமர்சனம் பகுதி 1

எழுத்தாளர் திரு பா. ராகவன் அவர்கள் டாலர் தேசம் என்ற மெகா தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வந்தார். அமெரிக்க சரித்திரத்தை மிகவும் சுவாரஸிமாய் எழுதி வந்ததை யாரும் மறுக்க முடியாது. கீழ்க்கண்ட விமர்சனம் அவரது ஈராக் யுத்தம் பற்றி மட்டுமே.

அத்தியாயம் - 113'ல் ஈராக் ஏன் யுத்தத்தில் சீக்கிரமாய்த் தோற்றுப் போனது பற்றி சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.முதலாவது மற்றும் இரண்டாவது ஈராக் யுத்தங்களை ஆர்வத்துடன் கூர்ந்து நோக்கியவன் என்ற முறையிலும், 7 வருடங்கள் கப்பல் படையில் பணியாற்றிய அனுபவத்துடனும் என் கருத்துக்களை இங்கே பதிகிறேன்.

ஈராக் யுத்தத்தில் ஏன் தோற்றது என்பதற்கான இரண்டாவது காரணமாய் அமெரிக்க கூட்டுப் ராணுவப் படையில் இம்முறை அமெரிக்காவும், பிரிட்டனும் மட்டுமில்லை. இன்னும் ஏராளமான தேசங்கள் இணைந்து கொண்டிருந்தன. ஆனானப்பட்ட ஜப்பானே ஒரு படையை அனுப்பத் தயார் என்று அறிவித்ததை அவர்கள் (ஈராக் ராணுவத்தினர்) எதிர்பார்க்கவில்லை...என்று போகிறது தொடர். இது என்னைப் பொறுத்தவரை திரு. பாராவின் சொந்தக் கருத்தாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தவிர நடைமுறை கணிதம் வேறு விதமாய் இருக்கிறது.

முதலாவது ஈராக் யுத்தத்தில், அமெரிக்காவைச் சேர்த்து மொத்தம் 34 நாடுகள் பங்கு கொண்டன. இவற்றுள் தனது படைகளை அனுப்பிய நாடுகள் 26. ஜப்பான் மருத்துவக் குழு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அறிக்கைப்படி முதலாம் "பிரவர்த்தனம் பாலைவனப் புயல்" (Operation Desert Storm), செலவு சுமார் US $61 பில்லியன். ஜப்பான் சுமார் US $16 பில்லியனை அமெரிக்காவுக்கு கொடுத்தது. இதை காசோலை சாதுர்யம்/ காசோலை ராஜ தந்திரம் (checkbook diplomacy) என்று உலக நாடுகள் ஏளனமாய் வர்ணித்தன.

அரசியல் சாசனப்படி (Pacifist Constitution), இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பன்னாட்டு வேறுபாடுகளைக் களைய, வேற்று நாடுகளுக்கு தனது படைகளை ஜப்பான் அனுப்ப முடியாது. இருப்பினும் 11 செப்டம்பர் அமெரிக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஜப்பானின் பிரதம மந்திரி ஜுனிஷிரோ கொஜுமி (Junichiro Koizumi) ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அதன் பின்னர் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக நடத்தும் யுத்தத்தில் ஜப்பான் பங்கு கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு மாறுதல் நிகழ்ந்தது.

ஆரம்பம் முதலே இரண்டாவது ஈராக் யுத்தத்தில் ஜப்பானின் நிலைப்பாடு குழப்பமாகவே இருந்து வந்தது. 80% ஜப்பானிய மக்கள் யுத்ததில் தங்கள் நாடு பங்கு கொள்வதை விரும்பவில்லை. ஆனால் அண்டை நாடான வட கொரியா ஜப்பானுக்கு எதிராக காட்டமான கருத்துகளை அள்ளி வீசிய போது, கொஜுமி வேறு வழியின்றி அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். நாளை வட கொரியா, ஜப்பானைத் தாக்கினால் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவி வேண்டுமே? சட்ட திருத்தமும் கை கொடுக்க கொஜுமி இந்த அரசியல் சூதாட்டத்தை அரங்கேற்றினார். அப்படியும் போர்முனைக்கு அனுப்பப்பட்ட ஜப்பானிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 1000 தான் இருக்கும்.

தொடருவேன்.