Wednesday, December 01, 2004

Hum Tum (நானும் நீயும்) 05/28/04

C:\Sam\Blog\New Items\humtum1
மெல்லிய காதல் கதையை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கலந்து 'ரிச்சாகக்' கொடுப்பது இந்தித் திரையுலகிற்கு புதிதில்லை. அரைத்த மசாலாவையே மீண்டும் அரைப்பதிற்கு கோலிவுட்டிற்கு சற்றும் சளைத்ததில்லை பாலிவுட். இப்படத்திலும் நாயகர், நாயகி நியூயார்க் பயணிக்கும் போது ஆரம்பத்திலேயே ஏற்படும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் கரண் கபூர் (செய்ப் அலி கான்) மற்றும் ரியா (ராணி முகர்ஜி) ஆம்ஸ்டெர்டாமில் ஆறு மணி நேரம் ஒன்றாக செலவிட நேருகின்றது. வாழ்க்கையை பார்ப்பதில் கரணுக்கும், ரியாவுக்கும் ஒற்றுமை என்பது எள்ளளவும் கிடையாது. 'எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்' என்ற பழமைத் தத்துவம் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்குமே! இருப்பினும் கதையை சின்ன சின்ன சம்பவங்கள் மூலம் அலுப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றிருக்கும் பாங்கு அலாதியானது. குணால் கோலியின் இயக்கத்தில் யாஷ் ராஜ் பேனரில் வெளியான மற்றுமொரு வெற்றிச் சித்திரமே ஹம் தும்.

கரணுக்கு நாடுகள், மதங்கள் போன்ற உலகப் பிரிவினைகளைவிட ஆண்-பெண் வேற்றுமையே பெரிதாகப் படுகின்றது. இக்கருத்தையே தனது ஹம் தும் என்ற கேலிச்சித்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றான். இக்கார்ட்டூன் முன்னணி நாளிதழில் வெளியாகி புகழும் பெறுகின்றது. திரைப்படத்தில் தேவைப்படும்போது கேலிச்சித்திரத்தின் பாத்திரங்களே கதையை நகர்த்துவது வித்தியாச முயற்சி.

ஆர்ம்ஸ்டர்டாமில் விளையாட்டாய் (நட்பாய்?) கரண், ரியாவை முத்தமிடுகின்றான். பிறகென்ன கன்னம் பழுக்கின்றது. அதிலிருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கின்றது.

பிளாஷ்பேக் பார்த்தே அலுத்துப்போன ரசிகப் பெருமக்களுக்களை கருத்தில் கொண்டு ஆறு மாதங்கள்/ஒரு வருடம்/ பத்து வருடங்கள் கழித்துதென்று படம் எதிர்காலத்திலேயே பயணிக்கின்றது. இக்காலகட்டத்தில் ரியாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சற்றே யூகிக்கும்படியிருந்தாலும் அதிக சினிமாத்தனம் கலக்காமல் இயல்பாய் இருக்கின்றது. முக்கால்வாசிப்படத்தில் வழக்கமான 'சாக்லேட் ஹீரோ' பிம்பத்தை தக்க வைத்து மீதிப் பகுதியில் முதிர்ச்சியான இளைஞனாக கரண் வேடத்தை செய்ப் அருமையாகச் செய்திருக்கின்றார். ராணியும் சளைக்காமல் நடிப்பில் ஈடு கொடுக்கின்றார்.
அவ்வப்போது ஆண்-பெண் உறவுமுறையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு கேலிச்சித்திரம் மூலம் விடை கொடுப்பது அசத்தல். உதாரணமாக 'வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்ணிருப்பாள் என்பது உண்மைதான். வெற்றி பெறாத ஆணை எந்தப் பெண் விரட்டப் போகின்றாள்?'

சிறப்பு வேடத்தில் செய்ப்பின் அப்பாவாக ரிஷி கபூரும், நட்புக்காக அபிஷேக் பச்சனும் வந்து போகின்றனர்.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் பில்லி கிரிஸ்டல் மற்றும் மெக் ரையான் நடித்த ‘When Harry Met Sally’ படத்தின் வாடை அடிக்கலாம். ஆனால் பாலிவுட்/கோலிவுட்டில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரமல்லவா? கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். கடைசி அரைமணி நேரம் இழுவை தேவையில்லை.

அசம்பாவிதங்கள் தாண்டி கரணும், ரியாவும் இணைகின்றார்களா என்பதை வெள்ளித்திரையில் காணவும். (இப்படித்தான் சினிமா விமர்சனத்தை முடிக்க வேண்டுமென யார் சொன்னதென்று நறநறக்க வேண்டாம்!)

1 comment:

ஜெ. ராம்கி said...

Saifkku time work out aiyutichhoo?