Tuesday, February 08, 2005

ஓட்டமும் சில உண்மைகளும்

நீர்த்துவாலையாய் அணுக்கள்
ஓடையைப் போல் துவங்கும்
வாழ்க்கையின் ஓட்டம்

எதிர்கால ஏக்கங்கள்
எதுவும் தெரியாமல்
நீர்க்குடத்தில் நிம்மதியாய்

உண்ண உணவு
உறைய இடம்
உடுப்பதை உதறி

அருவியாய் வேகம்பிடித்து
தலைகீழ் பயணம்
அந்தோ கொடியறுந்தது

மலைகளைப் போல்
வேகம் தாங்கும்
அன்னையின் நேசம்

ஆர்ப்பரித்து அடங்கி
அகண்ட காவிரியாய்
நிதானமாய் சிலநேரம்

முடிவு தெரிந்தாலும்
கரிப்பு இலக்கினை
மறக்கச் செய்த துணையாறு

போகின்ற போக்கில்
முளை விட்டுப் போன
சில கிளையாறுகள்

இறுதியை எய்ய
சாக்கடை நோய்கள்
சங்கமித்து உதவும்

பள்ளத்தை நோக்கியே
பாய்ந்து விட்டோமா
குறுகுறுக்கும் மனம்

நதியாவது பரவாயில்லை
அணையால் அவ்வப்போது
வந்த பாதை திரும்பிப் பார்க்கும்

மனித ஓட்டத்தை மறிப்பதென்ன?
பிரிவென்பதும் அணைதான்
வாழ்வின் துலாக்கோலாய்

1 comment:

Unknown said...

vaarthaigal sedukkiya vaazhkai payanavivaram..arumai.

Dev