Wednesday, March 14, 2007

ஒரு மலரின் பயணம்

பிறந்தது நந்தவனமில்லை
நஞ்சையோ புஞ்சையுமில்லை
வெறும் புறம்போக்குதான்
பாக்டெம்பாஸ் எசமான்
பாக்கெட்டிற்கு பத்தாது
எருமைச்சாணம்தான் என்றாவது

மலரென்பார் எம்மை
மலரவிடார் என்றும்
மொட்டுக்குத்தான் மார்க்கெட்டாம்
முதலிரவில் முழுவுடலை
மொக்கவிழ்க்கும் கட்டாய
பதைபதைப்பு தினம்தினம்

சூ(ட்)டு நாயகர் கையில்
கிடைக்கும் முன்னரே
கிட்டத்தட்ட ம(அ)லர்ந்திருப்பேன்
என்விதி எப்படியோ?
கூவக்கரையில் பிறந்துவிட்டு
கொசுக்களுக்கா கூவுவது?

பாடைகட்ட நேரமில்லை
வெட்டியானுக்கும் வேலையில்லை
மாருதிவேனிலொரு இறுதிப்பயணம்
அய்யோ தெரியவுமில்லை
கரண்டு அடுப்பு
ஷாக் அடிக்குமோ?

சாவில்சங்கு சரிதான்
ஆரவாரமேன் மானிடா?
பிய்த்தெறிந்த மாலையிலிருந்து யோசித்தேன்
பிய்ந்தொட்டிய என்னிதழொன்றை
உதறினாள் மாதொருத்தி
வெறுப்புடன் ஏனோ?

பூவையினி பூச்சூடாளென
சட்டாம்பிள்ளை சமூகமீதான
இழந்தவளின் எரிச்சலோ?
சோறானால் வாய்க்குணவாய்
சோரமில்லை ஆனால்
வாய்க்கரிசியாய் வாய்த்தேனோ?

விதி வகுப்பேன்
இப்பூக்கள் இனிமேலும்
இறுதிப் பயணத்துக்கல்ல
சக்கரமொன்று மேலேற...
எஞ்சிய இதழ்களும்
எங்கேயோ சிதறின...

2 comments:

Anonymous said...

too good ...one after a looooong time !!!

Anonymous said...

கவித போட்டிருக்கேன் அப்பிடின்னு ஒரு கடுதாசி போடலாமுல்ல? ஒரு இமெயில் அலெர்ட் கொடுங்க சாமிகளா