Wednesday, April 05, 2006

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:
பதிவு 1

பதிவு 2

கடலைப்பற்றி அறிந்தவர்கள், வியக்கும் முக்கியமான விடயம் "அதன் பிரும்மாண்டம்". அலைகளின் சலனமில்லாத ஆழ்கடலின் பிரும்மாண்டத்தில் ஆஜானுபாகுவான விமானந்தாங்கிக் கப்பல் கூட கொசுவாகத் தெரியும். கடல்நீரில் தோன்றி மறையும் வீக்கங்கள் (Swellings) அந்த பிரும்மாண்டத்தை இன்னும் பெரிதுபடுத்திக் காட்டும். மீனவர்கள் கடலை வெறும் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக படைக்கப்பட்டதாய் நினைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடல் ஒரு தாய், கடவுள், மாதா என்று பலவகைகளில் உருவகப்படுத்தி மகிழ்வார்கள். நாள் முழுதும் அலைந்து நினைத்த அளவு மீன் கிட்டாவிட்டாலும் கடலைச் சபிக்க மாட்டார்கள். தனது கடலெல்லைக்குள் மற்றவர் நுழைவதை "வன்புணர்வு" என்று இலங்கை மீனவர்கள் கருதுவது அதீதமான உணர்வு வெளிப்பாடல்ல. இதே காரணத்தால்தான் இந்தியாவிற்குள்ளும் மீனவ குப்பங்களிடையே சண்டை மூள்கின்றது. எனவே இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை "மேலாண்மை" திறத்துடன் மட்டும் அணுக முடியாது. உணர்வுப்பூர்வமாகவும் அணுக வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒரு உடனடி தீர்வு கிடையவே கிடையாது.

இதனை நன்கு புரிந்து கொண்ட SIFFS தனது முதலாவது நல்லெண்ணப் பயணமாக இந்திய மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றது. மீனவர்களும் மனம் விட்டு தமது பிரச்சினைகளை அலசினார்கள். பொதுவாக இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்களின் எல்லை கடந்து மீன் பிடிக்கும் பிரச்சினையில் வெளிப்படுத்திய உணர்ச்சிக் குமுறலைக் கண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். "கடற் கொள்ளை", "கடற் கற்பழிப்பு" போன்ற சொற் பிரயோகங்களைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.

இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாகக் கூறியது இதுதான் "இன்னும் 3 மாதத்திற்குள் எந்த இந்திய டிராலர்களும் இலங்கை கடற்பிரதேசத்திற்கு வரக்கூடாது". இது குறித்து இலங்கை சென்ற இந்திய மீனவர்களால் (சக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல்) மட்டும் உடனடியாக ஒத்துக் கொள்ளவும் முடியாது.

மேலும் இந்திய டிராலர்களால் இன்னொரு அபாயமும் உண்டு. அது இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து விடுவது. வாரத்திற்கு மூன்று நாள் இராமேஸ்வரத்திலிருந்து எப்படியும் இலங்கை கடற்பரப்பில் வரும் டிராலர்களால் பலமுறை இலங்கை மீனவர்களின் வலைகள் அறுந்து போனது இன்னொரு பிரச்சினையாக எழுப்பப்பட்டது. பெசாலைக்கு அருகிலுள்ள வங்காளபாடு கிராமத்தில் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய படகையும் நமது மீனவர்கள் பார்த்தார்கள். தமிழக அரசின் உத்தரவான ஆறு வாரங்கள் டிராலர்கள் மீன் பிடிக்கக்கூடாது என்பதைக் கூட இலங்கை மீனவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. பலர் டிராலர்களுக்குப் பயந்து கடல் பக்கமே போகாமல் கூட இருப்பதாய் குமுறியிருக்கின்றார்கள். இந்த நல்லெண்ணப் பயணத்திற்கு யோசனை தெரிவித்த திரு. அடைக்கலநாதன் MP'யையும் நமது மீனவர்கள் சந்தித்தார்கள். இமாதிரி முன்னோடி முயற்சிகளை நமது அரசியல்வாதிகள் செய்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.

மேலும் டிராலர்கள் பயன்படுத்தும் வலைகளான pair trawl, “mixture” net, “chank” net and “roller” net போன்றவை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், இலங்கை மீனவர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிரச்சினைக்குரிய அவ்வகை வலைகளை தாங்களாவே பயன்படுத்துவதில்லை என்ற முடிவை இராமேஸ்வரம் மீனவர்கள் கூறினார்கள்.

டிராலர்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே. இருப்பினும் அவற்றை இயக்குபவர்கள் பெரும்பாலும் குத்தகைக்கு எடுத்த, அல்லது வேலைக்கமர்த்தப்பட்ட ஏழை மீனவர்களே. இவர்கள் மீது இலங்கைப் பரப்பில் சென்று மீன் பிடிக்க வேண்டிய பணி கட்டாயமாக்கப்படுகின்றது. இருதலைக் கொள்ளியெறும்பு நிலைதான் இவ்வகை மீனவர்களுக்கு. இதனால் நாகப்பட்டினத்தில் 50 டிராலர்களை விற்று விட்டதாகவும் செய்தியுண்டு. நாகூர் மீனவர்களோ டிராலர் பிஸினஸே வேண்டாமென்று Yellow Fin Tuna பிடிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கின்றார்கள்.

இந்திய அரசாங்கம் முன் வந்து இவ்வகை டிராலர்களை நியாயமான விலைக்கு வாங்கினால் விற்பதற்கு பலரும் தயராக இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. குறைந்தபட்சம் வாங்கிய கடனை அடைத்தாலே போதுமென்று பலரும் நினைக்கின்றார்கள்.இராமேஸ்வரத்தில் டிராலர்கள் எண்ணிக்கை 500 ஆக உயந்தபோதே பல சங்கங்கள் மூலம் கடும் எதிர்ப்பை சில மீனவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் போய்விட இன்றைக்கு எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. டிராலர்கள் புள்ளி விவரம் வரும்பதிவில்.

இலங்கை மீனவர் பிரச்சினையின் தீர்வுகளாக முன்வைப்பது:

1. இராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கரையிலிருந்து மூன்று கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
2. நாகப்பட்டினம் மீனவர்கள் 7 கடல் மைல்கள் எல்லைக்குள் வரக்கூடாது
3. ஏற்கெனவே கூறியபடி நான்கு வகை டிராலர் வலைகளை யாருமே பயன்படுத்தக் கூடாது
4. கடலெல்லையைக் கடக்கும் படகுகளை மீண்டும் மீன் பிடிக்காதபடி இந்தியாவே தண்டிக்க வேண்டும்
5. வட-இலங்கை மீனவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் புழங்கும் கடலெல்லை ஏனைய மீனவர்களை விட வெகு குறைவு. எனவே அப்பகுதியில் இந்திய படகுகளின் ஊடுருவல் கூடவே கூடாது
6. இலங்கை அரசின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வடமராட்சி மீனவர்கள் குறைவான பகுதியில் மீன் பிடிப்பதால், இந்திய டிராலர்கள் நுழையக் கூடாது
7. மூன்று மாத கால அவகாசத்தில் அனைத்து இந்திய டிராலர்களும் இலங்கையில் கடலெல்லைக்குள் எங்குமே நுழையக் கூடாது. சுருங்கக் கூறின் அனைத்து இந்திய டிராலர்களையும் முடக்கவேண்டும்

பின்னர் நடந்த குழு கலந்துரையாடலில் இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்கள்:

1. இலங்கையில் டிராலர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதால் (செய்தியை உறுதி செய்ய முடியவில்லை), இந்திய மீனவர்களும் வருங்காலத்தில் டிராலர்களை கைவிட வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிவாகவில்லை. (மூன்று மாதம் பின்னர் மீண்டும் கால வரையறைப் பற்றி பேசவேண்டுமென்று எடுத்த முடிவு என்னாகியது என்றும் தெரியவில்லை)
2. பா(ல்)க் வளைகுடாவிலிருந்து 3 கடல் மைல் தொலைவு, யாழ்ப்பாணம்/வடமராட்சியிலிருந்து 7 கடல் மைல்கள் தொலைவு விதியை இந்திய மீனவர்கள் ஏற்றுக் கொண்டனர்
3. நான்கு வகை டிராலர் வலைகளும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய மீனவர்கள் உறுதி மொழி கொடுத்தார்கள்.
4. விதிகளை மீறும் படகுகள் மீது இந்தியா/மீனவ சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இலங்கை மீனவர்கள் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடாது
5. இரு நாடுகளிலும் சிறைப்பட்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை பெற இருதரப்பும் மும்முரமாக ஈடுபடும்

நல்லுறவு பயணத்தின் தொடர்ச்சியாய் இலங்கை மீனவர்கள் இந்தியா வந்தார்களா என்று தெரியவில்லை.

பிரச்சினைக்கு மேலும் சில தீர்வுகள் உண்டா? தொடர்ந்து அலசுவோம்.

1 comment:

பரி (Pari) said...

ஒரு வழியாக இந்தப்பக்கம் தலைகாட்டியதற்கு நன்றி :)
புதிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடரவும்.