Monday, April 10, 2006

விவாதக் கூ(கு)த்துகள் - 3

பின்னூட்டம் நீண்டுபோனதால் பதிவாகவேப் போடவேண்டிய அவசியமாகின்றது.

தங்கமணி ரோஸாவின் பதிவில் பின்னூட்டம் விட்டு தனது ஆதரவை அளித்துள்ளார். முழுதாக இங்கே:

**வேலையின் காரணமாக பல நாட்களாக இணையத்தின் பக்கம் வரவில்லையாதலால் உங்களின் இந்தப் பதிவை நான் இப்போதுதான் வாசித்தேன். இது போன்ற ஆதங்கத்தை, கேள்வியை, வருத்தத்தை நானும் பலமுறை எழுப்பியே வந்துள்ளேன்.

இந்திய அரசு இந்தப்பிரச்சனையை கையாளும் முறை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. உங்களது இந்தப்பதிவு அப்படியான கேள்விகளை உரக்க எழுப்பியது குறித்து என் நன்றி.

(இந்தப்பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு பதிலாக அந்தப்பதிவில் எழுதிவிட்டேன். அதனால் இங்கு மறுபடியும்..)

By Thangamani, at 4/09/2006 6:11 AM **

எது போன்ற ஆதங்கத்தை, கேள்வியை, வருத்தத்தை தங்கமணி எழுதினாரென்று படித்தறிய ஆவலாயுள்ளேன். இது ஒரு பகிடியில்லாத விண்ணப்பம். எனக்குத் தெரிந்த வரையில் புலிகள், தமிழ் தேசிய விஷயங்களிலும் ரோஸாவின் நிலைப்பாடுகளும், தங்கமணியின் நிலைப்பாடுகளும் வெவ்வேறு. இங்கே ரோஸா பேசுவது இந்தியா, அதன் இறையாண்மை, இந்திய குடிமகன்களான மீனவர் பிரச்சினை என்று. நிலைப்பாடுகளில் முற்றிலும் வேறுபடும் தங்கமணி அலாஸ்காவிலிருந்து இந்திய இறையாண்மை குறித்து ஆதங்கம்/வருத்தம்/கேள்வியை முன்வைக்கின்றாரா? ஏனெனில் அவர் இந்தியாவில் இருக்கும்போதே, இந்திய தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத "கலகக்காரர்" என்றல்லவா நான் நினைத்திருந்தேன். உடனே சுட்டி கேட்காதீர்கள். நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடித்துப் பிடித்து ஏற வேண்டிய தள்ளு முள்ளு கூட்டம் இருந்தால் தான் பேருந்தில் இடம் பிடிக்க "துண்டு" போடவேண்டும். இந்தப் பேருந்திற்கு அடிபிடி'க் கூட்டமில்லை என்றுதான் ரோஸாவும், நானும் வருத்தப்படுகின்றோம். அதனால் சும்மாச்சுக்கும் "துண்டு" போடாமால், உருப்படியாக கருத்து கூறவேண்டுமென்று தங்கமணிக்கு நான் விண்ணப்பம் செய்து கொள்கின்றேன்.

அடுத்ததாக முத்து ( தமிழினி) ரோஸாவின் பின்னூட்டத்தில் கூறியது:

***தமிழ், தமிழர் என்றெல்லாம் பேசுவது ஆபாசம் என்ற கட்டமைப்பை இதுவரை கொண்டு வந்து நிரவிய மக்களைத்தான் இதற்கு குற்றம் சாட்ட வேண்டும்.

இலங்கை தமிழனோ, இந்திய தமிழனோ மீன் பிடிக்க போன இடத்தில் குருவியை போல் சுட்டு தள்ளப்படும்போது அவர்கள் இலங்கை கடற்பகுதியை தாண்டி போனதினால் சுடப்பட்டார்கள் என்றும் அவர்கள் பெட்ரோல் கடத்தினார்கள் என்றும் கூசாமல எழுதுபவர்களை என்ன சொல்லுவீர்கள்?

இலங்கையில் உள்ள தமிழர்கள் உண்மையில தமிழர்களே இல்லை என்று சில பத்திரிக்கைகளில் எழுதினார்கள்..

இங்கு தமிழ் மீனவர்களை பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள் என்றால் சாரி..தமிழனுக்கு சுரணை கெட்டு ரொம்ப நாள் ஆகிறது.அதையும் கிண்டல் செய்து சிரிக்க ஆரம்பித்து பலநாள் ஆகிறது.

By முத்து ( தமிழினி), at 4/03/2006 3:31 PM

இலங்கை,பங்களாதேஷ், பர்மா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள் முதற்கொண்டு இந்திய நாட்டை கிள்ளுகீரையாக எண்ணாத ஏதாவது ஒரு நாடு நம் அருகில் உள்ளதா? சொல்லுங்கள் பார்ப்போம்.

By முத்து ( தமிழினி), at 4/03/2006 3:32 PM ***

1. தமிழ், தமிழர் என்றெல்லாம் பேசுவது ஆபாசம் என்ற கட்டமைப்பைக் கொண்டு வந்தது யார்? அவர்களுக்கும் ரோஸா பேசும் இறையாண்மை, இந்திய மீனவர் பிரச்சினை இதற்கெல்லாம் என்ன தொடர்பு?
2. எனது பதிவுகளை அனைத்தும் படித்திருப்பீர்கள் என்ற குறந்தபட்ச நம்பிக்கையுடன் கேட்கின்றேன். "கூசாமல்" எங்காவது நான் போகின்ற போக்கில், ஆதாமில்லாத குற்றச்சாட்டுகள், எத்தரப்பின் மீதாவது வைத்துள்ளேனா?
3. இலங்கையில் உள்ள தமிழர்கள் உண்மையில் தமிழர்களே இல்லை என்று சில பத்திரிக்கைகளில் எழுதினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதற்கும் இங்கே நடக்கும் விவாதத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
4. தமிழனுக்கு சுரணை கெட்டு நாளாகின்றது என்று கூறுகின்றீர்கள். அப்படியென்றால் உங்களுக்கு சுரணை இன்னும் இருக்கின்றதென்று பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்கின்றேன். சுரணை உடைய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? உங்களிடம் அதிகாரமிருந்தால் இப்பிரச்ச்சினைக்கு தீர்வென்னவென்று சொல்லுங்கள்.
5. இந்திய நாட்டை கிள்ளுக்கீரையாய் அனைத்து நாடுகளும் நினைக்கின்றன. நல்ல ஆராய்ச்சி. கவலைப்படாதீங்க முத்து. தமிழ்நாட்டைப் பிரித்து, உங்களை அதிபராக்கி விடுவோம். சுரணையுள்ள நீங்கள் தமிழக இராணுவத்தை (அ·தாவது தற்போதைய போலீஸைக் கொண்டு) ஒரு விரல் சொடுக்கில் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடலாம்.

விஷயத்தின் வீரியம் அறியாமல், பிரச்சினையின் பூர்வீகம் தெரியாமல் உங்களைப் போன்றோர் "தமிழ்", "தமிழன்", "தமிழ்த்தேசியம்" என்று எதற்கெடுத்தாலும் குதிக்கும்போது எல்லா நேரமும் அமைதியாய் இருக்க முடியவில்லை. உங்களைப் போல சுரணையின் அளவு இல்லாவிடினும் பாழாய்ப்போன பழைய வழக்கங்கள், இப்படி ஏதாவது மீண்டும் எழுத வைத்து விடுகின்றன.

6. சூடாகவும் எழுதுவீர்களா (மண்டுகம் இன்னபிற) என்று கேட்டுள்ளீர்கள். அடைமொழிகளிலோ, வெற்றுச் சவடால்களிலோ உங்கள் ஆசான் ரோஸாவைப் போல எனக்கு நம்பிக்கையில்லை. அவரே தனது அடுத்தடுத்த பதிவுகளில் அதைக் குறைத்துக் கொண்டதையும் இங்கு நினைவு கூர்தல்முக்கியம். இருப்பினும் கார்த்திக்கின் உளறல் எல்லை கடந்து போய்விட்டது. அதனால் அத்தகைய கடுமையான விளிப்பு அவசியமாகிவிட்டது.

7. உங்களது எனது பதிவில் வந்த பின்னூட்டத்தின் இறுதியில் கேட்ட கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் கூறிவிட்டேன். வேண்டுமென்றால் கேள்விகளை வேறுவிதமாகத் தெளிவாகக் கேட்டால் கண்டிப்பாய் பதில் தர முயலுகின்றேன்.

8. ஆமாம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நாம் பார்த்திருக்கின்றோம்.

6 comments:

Anonymous said...

Hello Vanthiyathevan,

I don't understand why all these idiots are talking bad against you. Since you were a lieutenant in Indian Navy, you know the depth of this problem very well more than any other idiot in the tamil blogspot world. But I think they want to treat you like a north Indian and say bad about you.

Your way of touching the crux of the problem is not understandable by all these "Mandoohams". But that will never stop you in bringing out the truth in these matters.

You are really doing a favor for tamil community. Please do continue your postings. WE all love that.

Muthu said...

வந்தியதேவன்,

நன்றி.

பேருந்தில் கூட்டமில்லை என்று ஏறிவிட்டு டிக்கெட் எடுக்க காசில்லாமல் இருந்தால் என்ன செய்வது என்பது என் கவலை:))

சரி விடுங்கள்.

1,3,4,5(b) இதையேதான் அவரும் கேட்டார்.பிரச்சினையின் டோட்டாலிட்டியை பார்த்தால் இந்த இனம்,ஈழம் போன்ற விஷயங்கள் வருவது தவிர்ககமுடியாதது என்பதுதான் உண்மை.விடுதலைபுலிகள் பெட்ரோல் கடத்தியதால்தான் சுட்டுகொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் காரணம் வரும்போது அதன்பின்னால் அணிவகுத்து இவையும் உள்ளே வருகின்றன.முக்கியமான குற்றச்சாட்டுக்கள் இவை.மக்கள் மனதில் அடிப்படையாக இருப்பவை இவை.தேசிய நீரோட்டத்தில் நாம் இணைந்து சரியாக துடுப்பு போடுவதில்லை என்பதால் நாம் ஒதுக்கப்படுகிறோம் என்பதான ஒரு பார்வை இருக்கிறதா இல்லையா?
தப்பாகவே இருக்கட்டும்.பொதுவாக இருக்கும் ஒரு பார்வையை ஒரு பார்வையாளன் வைத்தால் அது அப்படி இல்லை என்று சொல்லுங்கள். அப்படியெல்லாம் சொல்லவேக்கூடாது உட்கார் என்று கூறிகிறீர்கள் வந்தியதேவன்.

2.நீங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எங்காவது வைத்தீர்கள் என்று நான் சொன்னேனா? தனிப்பட்ட சில கூ(கு)த்துக்கள் தவிர யாரையும் குற்றச்சாட்டியது போல் இல்லை.செய்திகளை கூறுவதுபோலத்தான் இருந்தது. இது ஒரு பாஸிடிவ் கட்டுரை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும்.(ஐந்து பாகத்தை மூன்று பாகத்தில் முடித்தீர்கள் என்றால் பின்னர் ஏதாவது புத்தகம் எழுதினால் ஒரு அத்தியாயமாக போடலாம்)

4(b)என்னிடம் அதிகாரம் இருந்தால் முதலில் கச்சதீவை திரும்ப வாங்க முயற்சிப்பேன்.

5.இந்தியாவை கீள்ளுகீரையாக யாரும் நினைக்கவில்லை என்றால் சந்தோஷம் பங்களாதேஷ் காரன் கண்ணை நோண்டுறான், இலங்கை காரன் மீனவர்ளை சுடறான்,பாகிஸ்காரன் சீனாகாரன் சொல்லவே வேண்டாம்.

6.நல்லவேளை என்னை மண்டுகம் என்று சொல்லாமல் விட்டீர்கள்:))
யாரும் யாருக்கும் ஆசானாக முடியாது அய்யா. ஆனால் ரோசாவின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும்.இதிலென்ன வெட்கம்.நான் புதுசுங்க.
நீங்க கூட நல்லாத்தான் எழுதறீங்க.

நான் வந்து எழுதியதில் உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையே.மிக்க நன்றி.

Muthu said...

அந்த காலாவதியான ஒப்பந்தம் மேட்டர் பத்தி நான் கேட்டதற்கு மட்டும் உங்க பார்வையை சொல்லுங்க.மீதியெல்லாம் ஓ.கே.

Vanthiyathevan said...

முத்து (தமிழினி),

பொறுப்பான பின்னூட்டத்திற்கு நன்றி. தெரிந்தோ, தெரியாமலோ பஸ்ஸில் ஏறிவிட்டீர்கள்.காசில்லாவிடினும் கவலை வேண்டாம். இப்பிரயாணம் இலவசம். இப்போது இலவசம் என்று சொல்லிவிட்டு நடுவழியில் நீ இறங்கு என்று இணையத்தில் சிலர் போல இறக்கி விடவும் மாட்டேன்.

ரோஸா தெளிவாகக் கூறியிருக்கின்றார். சாரு நிவேதிதா பற்றிய பதிவில் என்று நினைக்கின்றேன். எழுதியவரின் பின்புலத்தையும் வைத்துதான் அவர் கூறும் கருத்தை தான் எடை போடுவதாக. அக்கருத்தோடு முழுமையாக நான் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும், இனம், ஈழம் குறித்த முக்கிய விஷயங்களில் ரோஸாவும், தங்கமணியும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பது சிதம்பர இரகஸியம். தங்கமணி இந்திய இறையாண்மையைக் குறித்து விசனப்பட்டால் அதை "முதலைக் கண்ணீர்" வகையில் கூட சேர்க்க முடியாது. சௌகர்யமாக இதற்கெல்லாம் அவர் பதில் கூட எழுத மாட்டார். நீங்களாவது இது குறித்து அவரிடம் கேட்டுச் சொல்லுங்களேன்.

உங்களது கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பதால்தான் இன்னமும் எனது தரப்பை விளக்கிக் கொண்டுள்ளேன். மாற்றுகருத்துகளை வரவவேற்க வேண்டும். அப்போதுதான் விவாதம் செழுமையுற்று, முடிவு/தீர்வு என்று நகர முடியும். ஆனால் கிராமத்து வைத்தியரின் "ஒரு சூரணம் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துவது போல" எல்லாப் பிரச்சினைகளுக்கும் பொதுக்காரணிகளாக தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்று பேசப்படும் போது பிரச்சினைகளையே திசை திருப்பிவிடுவது ஆகாதா? இதே கோணத்தில் நானும் சிந்தித்து இருந்தால் இத்தொடர்களை எழுதுவதும் சாத்தியமா? நீங்களே கூறுங்கள்.

ஏற்கெனவே நான் எழுதியபடி கச்சத்தீவை திருப்பித் தர இலங்கை முன்வராது. மேலும் பேராசிரியர் சூர்யநாராயணன் கூறுவது போல நிரந்தரக் குத்தகைக்கு இலங்கையிடமிருந்து பெற அரசாங்கம் முயலலாம். நீங்கள் கேள்விகளை முன்வைத்தது குறித்து சந்தோஷமே. பதிலளிப்பதும் சிரமமென்று கருதியதில்லை.

1974/76 ஒப்பந்தத்தை வலியுறுத்த எந்த நடுவண் அரசும் முயலாதது விந்தையே. இடைப்பட்ட முதல்வர்கள்/பிரதமர்கள் குறித்து எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. ஆனால் இன்னமும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதைத்தூசி தட்டி செயல்முறைப்படுத்தினால் நிரந்தத் தீர்வு வரும் வரையில் சில பிரச்சினைகளை (இந்திய தரப்பிற்கு) தடுக்கமுடியும். ஆனால் இலங்கை மீனவர்கள் இதை ஒரு இடைக்காலத் தீர்வு என்று ஒத்துக் கொள்ளச் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் எழலாம். எனவே எந்த முடிவையும் எடுக்கு முன்னர் இருதரப்பும் உடனடியாக பேச்சு வார்த்தைகளையாவது தொடங்கவேண்டும். இலங்கை கடற்படை கடலெல்லைகள் மீறும் இந்திய மீனவர்களைச் சுடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து இந்திய அரசு மௌனம் காத்தால் அதை விட அசிங்கம் கிடையாதென்று சொல்வதில் எனக்கு பிரச்சினையில்லை.

பார்வைக்கும், பதிலுக்கும் நன்றி.

Anonymous said...

Anony,
piss off!

முகமூடி said...

உண்மையான தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி... தேசியம் பேசும்போதே வந்தியத்தேவன் காவி கட்சி ஆளாத்தான் இருக்க வேண்டுமென்று நாம் சந்தேகப்பட்டோம்.. சந்தேகம் உறுதியாகும் வகையிலே ஒரு செய்தி இன்று தினமணியில் வந்திருக்கிறது... செய்திக்கு போவதற்கு முன் கச்சத்தீவு என்ற வார்த்தையை வந்தியத்தேவனும் அம்மாவும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பேசுவதால் ஒருவேளை வந்தியத்தேவன் = அம்மா என்ற சநதேகம் மற்றவர்களுக்கு வருவதை பற்றி நமக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்...

கச்சத் தீவை நிரந்தர குத்தகையில் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்: ஜெயலலிதா பேச்சு

நாகர்கோவில், ஏப்.12: கச்சத் தீவுப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பெறுவதற்காக, கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெற வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து, அஞ்சுகிராமத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியது:

மீனவர் நலனுக்காக சேமிப்பு, நிவாரணத் திட்டம், மீனவர் குழுக் காப்புறுதித் திட்டம், இலவச வீட்டு வசதித் திட்டம், மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுமட்டுமின்றி மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் உபயோகப்படுத்தும் டீசலுக்கு விற்பனை வரியை முழுவதுமாக நீக்கி, விற்பனை வரியில்லாமல் மீனவர்களுக்கு அதிமுக அரசு டீசல் வழங்கி வருகிறது.

கச்சத் தீவுப் பகுதியில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பெறுவதற்காக கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெறவேண்டும் என்று மத்திய அரசை அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

மீனவர் பாதுகாப்பு திட்டம்:உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்று மீனவர் பாதுகாப்புத் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஜெயலலிதா.