Tuesday, May 25, 2004

நிதர்சனம் (55 வார்த்தை சிறுகதை)

"எல்லாமே போதும்னு தோணுதுடா. எவ்வளவு நாள்தான் இப்படி சொந்தபந்தத்தை பிரிந்து கஷ்டப்படறது?"

அனுதாபமாய்ப் பார்த்தேன். உற்றாரைப் பிரிந்து அயல்நாட்டில் உழழும் எவர்க்குமே தோன்றும் இயல்பான உணர்வு. அதுவும் எடுபிடி வேலையெனில் நிதமும் தோன்றும்.

"சொந்த ஊரில் பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்வேன். பொண்டாட்டி புள்ளைய வருஷக்கணக்கா பாக்காம இருப்பதைவிட சாபக்கேடு எதுவுமேயில்லைடா..."

எனக்கு பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. எனக்கும் சேர்த்துதான் அவனே பேசிவிட்டானே...

ஒருவழியாய் போன்லைன் கிடைத்து வீட்டில் பேசித் திரும்பியவன் சொன்னான்...

"அம்மாவுக்கு புற்று நோயாம்டா..."

No comments: