Sunday, July 18, 2004

பூவுதிர் அவலம்
அக்னி ஆண்டவா
உன்
அகோரப் பசிக்கு
இளம் குருத்துக்களா?

சிறாரை
சிறைவைத்து
பறந்ததோடினராம்
ஆசிரியப் பேடிகள்

கோழையாம்
அவர்தம்மை
தீயே நீ
தின்னிருக்க வேண்டாமா?

சட்டசபை கட்டவும்
அதைத் தடுக்கவும்
கஜானா நிரப்பவுமே
நேரம் போதவில்லை
அரசியல்வாதிகட்கு

இச்சம்பவமினி
மெல்லச் சாகும்
அடுத்த மயானச்செய்தியில்
வரலாறாகும்

நீதி
கேட்போருக்கு
நிதி
கொடுப்பர்

பள்ளிப்
பாதுகாப்புக்கு
புதிய துறை
உருவாகும்

இன்ன பிற
அரசுத் துறைகள் போல
லஞ்ச லாவண்யம்
தலை விரித்தாடும்

உதவிக்கரம் நீட்டி
இறந்துபோன
தொழிலாளிக்கு
சிலை வைக்காதீர்

அவனது
இறுதி ஈரத்தை
மனித நேயம் வளர்க்க
எல்லார் மேலும் தெளியுங்கள்

எட்ட நின்று மாரடிக்கும்
இயலாமை என்னை
மெல்லக் கொல்லும்
சப்தமின்றி
 

No comments: