Friday, June 18, 2004

நீ இறந்தால் தீபாவளி

ரா --- ரபீந்திர சிங்


இவன் 20 வருடங்களாக இந்தியாவின் உளவு நிறுவனமான ரா'வில் (Research Analysis Wing) பணியாற்றி, இந்தியாவையே உளவு பார்த்த டபுள் ஏஜெண்ட். அமரிக்க உளவு நிறுவனமான CIA'வின் கையாளாய் இருந்து வருபவன். ஜூனியர் விகடனிலும், ஹிந்துவிலும் இவனைப் பற்றி பத்தி பத்தியாகப் பதிக்கிறார்கள்.

நினைக்கவே நெஞ்சம் கூசுகிறது. ரா'வில் இணைச் செயளாளர் அந்தஸ்து வரை வளர்ந்த இவன் ஒரு முன்னாள் இராணுவ வீரன். மேஜராய் இருந்த போது புளூ ஸ்டார் ஆபரேஷனில் கலந்து கொண்டவன். கப்பற்படையில் லெப்டினென்ட்டாய் பணியாற்றிய நான் இதைப் படித்த போது குன்றி போய்விட்டேன். எப்படி இவனால் இத்தகைய பாதகச் செயல் செய்ய முடிகிறது?

தேசப் பற்று என்பது தாய் பக்தியைப் போன்றது. தாயைக் கூட்டிக் கொடுக்கும் செய்கையைச் செய்த இவனைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

பாகிஸ்தானோடு போர் புரியும் போது எண்ணற்ற முஸ்லிம் வீரர்கள் இந்தியாவிற்காக போரிட்டு மாண்டனர். அப்போது மதம் நாட்டுப் பற்றுக்குக் குறுக்கே வரவில்லை. இந்திய அமைதிப்படையில் பல தமிழ் வீரர்கள் தங்கள் கடமையை செய்தார்கள். வம்சாவழி தேசப்பற்றுக்குக் குறுக்கே வரவில்லை. நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்பவர் மத்தியில் இப்படியும் சில மிருகங்கள்.

செய் அல்லது செத்து மடி, The more you sweat in peace the less you bleed in war போன்ற பல்வேறு பொன்மொழிகளை நான் இராணுவத்தில் தான் கற்றுக் கொண்டேன். உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் விமான தளத்தைக் கொண்டிருக்கும் லே (Leh) ஆகட்டும். விஷ், விஷ் என்று எப்போதும் புல்லட்டுகள் பறக்கும் காஷ்மீர் எல்லையாகட்டும். முப்படைகள், எல்லையோர காவல் படை, இன்னும் கணக்கில்லா "Support Groups" இவற்றிலிருந்து பலர் தமது கடமையை செம்மையாகச் செய்வதால்தான் நாம் ஒழுங்காக உண்டு உறங்க முடிகிறது. இலஞ்சம்/கையூட்டு என்று காசுக்கு சோரம் போபவரே...யோசித்துப் பாருங்கள்...காஷ்மீரில் ஒரே ஒரு இராணுவ வீரன் கையேந்தினால் என்ன நடக்குமென்று...

ரபீந்திர சிங் அமெரிக்காவிற்கு பறந்து விட்டான். நேபாள எல்லையில் அவனுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டு ராஜ மரியாதையுடன் பயணம் (இதிலெல்லாம் அமெரிக்கா விசா கோட்டா பார்ப்பதில்லை). அவரது பெண் அமெரிக்காவிலேயே படித்து, கல்யாணம் செய்து செட்டில் ஆகி விட்டாராம்.

ஐயா! அம்ரிஸ்தாரின் ரகுநாதத் தொண்டைமானே...உமது மனைவி மற்றும் மகளை அமெரிக்காவிற்காக கூட்டிக் கொடுத்து விடாதீர்கள். அமெரிக்கா பற்றித் தெரிய வேண்டுமென்றால் மாதத்திற்கு $400,000 (ஈராக் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்புக்காக) கொடுத்து உங்களை மாதிரியே இருந்த ஈராக் டபுள் ஏஜெண்ட் "அகமது சலாபி" கதை கேளுங்கள். சலாபி ஈரானுக்காக உளவு பார்த்ததாகச் சொல்லி CIA பெரிய ரெய்டு நடத்தியது. நேற்று வரை "ராஜா" மாதிரி இருந்த சலாபி இப்போது "குற்றவாளி". பல வருடங்களாக (உங்களைப் போல) பணியாற்றியதற்கான பரிசு சலாபிக்கு விரைவில் கிட்டி விடும். அது அதிகாரப்பூர்வமாகவா (பல வருடம் ஜெயில் அல்லது மரண தண்டனை) இல்லை அதிகாரப்பூர்வமற்றோ...(அடையாளங் காணப்படாத நபர்களால் சுடப்பட்டு இறந்தார்).

எப்படியோ நீ வதம் செய்யப்படும் நாள் எனக்கு இன்னுமொரு தீபாவளி...

No comments: