Friday, June 25, 2004

வெள்ளை உள்ளம் - பகுதி 3

அம்மாவின் அண்டை வீட்டு சிநேகிதம் விபரீதமாகிவிட்டதோ?

"நேத்து சாயங்காலம் திடீர்னு விக்னேஷ் நிறுத்தாம அழுதப்போ சுகன்யாதான் ஆட்டோவப் புடிச்சு, ஆஸ்பத்திரி கூட்டிப் போய், டாக்டரிடம் பேசி...ஐயோ சாமி...எனக்கு கை காலு ஓடல தம்பி...அவதான்...கடவுளா வந்தாப்பா", என்று அம்மா சொன்ன போது இயல்பான மனிதத்தன்மைக்கு மனமாற வாழ்த்தினேன்.

ஒரு வேளை இது பச்சாதாபமோ? எண்ணங்கள் அலை மோதியது. விக்னேஷின் அழுகுரல் குமாரை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. சமைலறையிலிருந்து ஓடிவந்த அம்மா பிரிஜ்ஜிலிருந்து பால் புட்டியெடுத்து வீதியில் போகும் வாகனங்களைக் காட்டியபடி புகட்ட குமார் புதைந்திருந்த நினைவுகளிலிருந்து மீண்டான்.

கொஞ்ச நேரத்தில் விக்னேஷ் உறங்கிப் போனான். திடீரென்று குமாருக்கு அந்த ஐடியா முளைத்தது. நாம் ஏன் சுகன்யாவுடன் பேசிப்பார்க்க கூடாது? காலையில் காரை ஸ்டார்ட் செய்யும் போது சுகன்யாவின் ஒற்றை வரி கேட்டவுடன் பேசியிருக்க வேண்டும். மனதுக்குள்ளே திட்டிக் கொண்டான்.

"அம்மா நான் மறுபடி ஆபீஸ் போறேன். லஞ்ச் அங்கேயே பாத்துக்கறேன்"

"தலைவலி எப்படி இருக்குப்பா?"

"சரியாயிடுச்சிம்மா...போயிட்டு வரேன் "

ஆபீஸில் நுழைந்த குமாரை வினோதமாய் ஏறிட்டாள் கவிதா. கவனியாமல் தனது அறையில் நுழைந்தான் குமார். டெலிபொன் டைரெக்டரியில் துழாவி சுகன்யாவின் ஆபீஸை டயல் செய்ய முதல் முறையிலேயே தொடர்பு கிட்டியது.


"சுகன்யாவோட பேசணும்"

இரண்டு நிமிட இசைக்குப்பின் சுகன்யா ஹலோ சொன்னாள்.

No comments: