Tuesday, August 10, 2004

பெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல்,

கும்பகோண தீ விபத்திற்கு இயலாமையில் எட்ட நின்று நான் மாரடித்தேன். நீங்கள் பல படி மேலே சென்று கலாம் வரை வலைபதிவாளர்களின் குரலை எடுத்துச் சென்றீர்கள். இறந்துபோன தளிர்களுக்காகவும், இனி இவ்வாறு நடக்கக் கூடாதெனும் உங்களின் மனித நேயம் வாழ்க !!!

அதே மனித நேயம் தங்களது "நம்மற்குரியர் அவ்வீரர்" பதிவிலும் காணப்பட்டது. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வல்வெட்டித்துறையில் வன்முறையில் இறந்து ஈழத்தமிழருக்காக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. நடந்தது தவறு என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் ஒருவழி அணுகுமுறைதான் பலமாய் இடிக்கிறது.

NCC'ல் ஒரு ஹவில்தாரின் "கதை" கேட்டு அமைதிப்படையின் நோக்கத்தையே எடை போட்டு விட்டீர்களே? பேஷ்..பேஷ்...கதை கேட்டதற்கு வெட்கப்படுவதாய் பாவமன்னிப்பு வேறு கேட்டு விட்டீர்கள். நாணயத்தின் இருபுறத்தையும் சீர் தூக்கி எழுதவேண்டியது எழுத்தாளனின் சமூகக் கடமை. இணையத்தில் ஈழம் பற்றி பேசவே பல "தமிழ்நாட்டுத் தமிழர்கள்" அஞ்சுகின்றார்கள். தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குகின்றார்கள். இதே பாலஸ்தீனம், அமெரிக்கா, ஈராக் என்றால் பத்தி பத்தியாக கதைக்கின்றார்கள். ஏனிந்த இழிநிலை?

மிகுந்த இழப்புகளைச் சந்தித்து, புலம் பெயர்ந்து, எழுதும் ஈழத்தமிழர்களின் பதிவுகளைப் படித்து வருகின்றேன். அவர்களின் கண்ணீரிலிருக்கும் சூடு, பிற தமிழர்களின் பதிவில் நீலியாக நீர்த்துத்தான் தெரிகிறது.

பல ஈழ இணையங்கள் புலிகள் வீரமாய் போரிட்டு இந்திய சிப்பாய்களைக் கொன்றதாக தெரிவிக்கின்றது. ஆறு வயது சிறுவனிலிருந்து, பெண்கள் வரை யாரையும் விடாத தற்கொலைப் புலிகள் மத்தியில் அமைதி காக்க வந்து, அவமானச் சின்னங்களுடன் திரும்பிய இந்திய இராணுவத்தின் கதையை "எல்லை தாண்டி எரிந்த சிறகுகளில்" எழுதினேன்.

யாராவது நூல் பிடித்து "அறிப்பூர்வமாகவோ", "உணர்வுப்பூர்வமாகவோ" எழுதுவார்களா என ஏங்கிய காலமுண்டு. மூக்கு சுந்தரின் பதிவு மிகவும் துணிகரமான ஒன்று. அவரெழுப்பிய பல நியாயமான கேள்விகட்கு பதில் காணும் தருணம் இது.

ஆமாம். ஆளாளுக்கு இந்திய இராணுவத்தை இழுக்காக்கிறார்களே? ஏன்? ஆக்கிரமிப்பு இராணுவமாம்...அமெரிக்கா குவைத்தில் கொண்ட காதலா இது? தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது? யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும்? யோசித்துப் பாருங்கள்.

வானவெளியிலிருந்து உணவுப்பொட்டலங்கள் போட்டவன்தானே IPKF அனுப்பிய ராஜீவ் காந்தி? ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, IPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே? அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே? சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு? நானும் இணையத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். 93 தளிர்களுக்கு ஒப்பாரி வைத்த உங்கள் உள்ளம் இப்போது கல்லாகி விட்டதா?

வல்வெட்டித்துறை வன்முறைக்கு ராஜீவின் சாவுக்கடியில் அசிங்கம் கண்டுபிடித்த அவலம் உங்களைப் போல் அதிமேதாவிகளாலேயே முடியும். இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ராஜீவ் என்கின்ற ஆரியன், ஈழத் திராவிட தமிழர்களை அழிக்க நினைத்தான் எண்டு நினைப்போம். அது பிடிக்கவில்லையெனில் ராஜீவுக்கு பார்சிய ரத்தத்தை விட பார்ப்பனீய ரத்தம் அதிகமுள்ளதெனப் பேசுவோம். உங்களுக்குத்தான் எதிலுமே ஆதியும் அந்தமும் வேண்டுமே?

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பின்னூட்டம் வேறு விட்டிருக்கிறீர்கள்? பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி? NCC'ல் பணியாற்றியதா? IPKF பணியாற்றிய சமயத்தில் MP'யான வை.கோபால்சாமி கள்ளத்தோணி ஏறி பிரபாகரனை சந்தித்து சாதனை படைத்தார். பின்னர் பிரேமதாசா "இந்திய இராணுவமே வெளியேறு" சொன்னபின் வந்த IPKF கடைசிக் கலத்தை வரவேற்க கூடச் செல்லாத கோமான் அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர். நான் இவ்விருவரையும் (உங்கள் கட்டுரை படித்தபின்) இன்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் டாக்டர் சுந்தரவடிவேல்...உம்மை...வார்த்தைகள் வரவில்லை.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஒரே ஒரு ஈழ இணையத் தமிழனைக் எனக்கு காட்டுங்கள். ஆச்சரியமாக உங்களால் முடியாது.இன்னொரு நிதர்சனம். புலிகள் ஒத்துக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.

மேலும் பதிவேன்.

No comments: